எந்திரன் வழக்கு: ரஜினி நடிக்கும் 2.O படத்திற்கு தடை வாங்க எழுத்தாளர் முயற்சி?
எந்திரன் கதை வழக்கை இழுத்தடிப்பதால் ஷங்கரின் 2.O பட வெளியீட்டிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது.
சென்னை: இயக்குநர் ஷங்கரின் 2.O படத்துக்கு தடை வாங்கும் முயற்சி நடப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது.
ரஜினி நடித்து சங்கர் இயக்கிய எந்திரன் படத்தின் கதை என்னுடையது என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கிட்டத்தட்ட 6 வருடங்களாக வாய்தாக்களை வாங்கியபடியே வழக்கை ஷங்கர் தரப்பு இழுத்தடித்துக்கொண்டு வரும் நிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று வந்தது. ஆரூர் தமிழ்நாடனிடம் குறுக்கு விசாரனையை நடத்தினார் ஷங்கர் தரப்பு வழக்கறிஞர்.
விறுவிறுப்பாக நடந்த இந்த விவாதத்தின் ஒருகட்டத்தில் ஷங்கர் தரப்பு வழக்கறிஞர், நீதிபதியிடம் மீண்டும் வாய்தா வாங்கினார்.
இதனால் வழக்கு விசாரணை 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கை நடத்த சங்கர் தரப்பு ஒத்துழைக்காத பட்சத்தில் அவரின் 2.Oபடத்தின் வெளியீட்டிற்கு தடை கேட்க எழுத்தாளர் தரப்பு திட்டமிட்டுளளதாம்.
இதற்கிடையே 2.O படத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் நடிக்காமல் போனதற்கும் எந்திரன் வழக்குதான் காரணம் என்றும் பரபரப்பு கிளம்பியுள்ளது. 2.0 படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் அர்னால்டு.
இதற்கான பேச்சுவார்த்தைக்காக மும்பை வந்திருந்தார் அர்னால்டுவின் மேனேஜர். அந்த சமயத்தில், கதை திருட்டு வழக்கில் ஷங்கரின் எந்திரன் படம் சிக்கியிருப்பதை அறிந்த மேனேஜர், அதனை அர்னால்டுவிடம் சொல்ல, ஷங்கரின் 2.0 படத்தில் அர்னால்டு நடிக்க மறுத்தார் என்பது இதுவரையில் வெளிவராத தகவல் என்கிறது கோலிவுட் வட்டாரம்.