ஓ.பி.எஸ்.. நீங்கள் தோற்றாலும் வென்றவரே..!
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ் முதலில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு தருகிறாரோ இல்லையோ அல்லது ஓ.பி.எஸ் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்கிறாரோ இல்லையோ, அவருக்கு நிச்சயம் இது தோல்வியே கிடையாது. மாறாக வெற்றிதான்.
ஓ.பன்னீர் செல்வத்தை எதற்குப் பாராட்டுகிறோமோ இல்லையோ இந்த ஒரே ஒரு காரணத்துக்காக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் உளமாற பாராட்டுவார்கள், தலைமுறைக்கும் வாழ்த்தி மகிழ்வார்கள்.. அது சசிகலாவை முதல்வராக விடாமல் தடுத்த அவரது அதிரடி தைரியத்திற்காக.
சசிகலாவை முதல்வராக கனவிலும் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை தமிழக மக்களால். சசிகலா எப்போது முதல்வர் பதவியை நோக்கி நகர ஆரம்பித்தாரோ அன்றே தூக்கம் தொலைத்தது தமிழ் கூறும் நல்லுலகம். யாராலும் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. எப்படி இதைத் தடுக்கப் போகிறோம் என்ற மன உளைச்சலில் சிக்கித் தவித்தனர் தமிழ் மக்கள்.
முதல்வர் பதவிக்கு கைக்கெட்டும் தூரத்தில் அவர் நெருங்கி விட்டபோது துடிக்காத தமிழர்களே இல்லை. அந்த நேரத்தில்தான் பொங்கி எழுந்தார் ஓ.பன்னீர் செல்வம். அப்படியே ஒட்டுமொத்த தமிழக மக்களின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டு விட்டார்.
அதிமுகவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தாண்டி ஒரு தலைவருக்கு இப்படி ஒரு ஆதரவு கிடைத்ததில்லை என்று கூறும் அளவுக்கு ஓ.பி.எஸ்ஸுக்கு மிகப் பெரிய ஆதரவு கட்சியினரிடையே கிடைத்தது. அதை விட தமிழ் மக்களின் மனதில் மிகப் பெரிய ஹீரோவாக உயர்ந்து நின்றார் ஓ.பி.எஸ்.
சசிகலாவை தடுத்து நிறுத்தி தமிழ் மக்கள் தலைக் குனிவைச் சந்திக்காமல் காத்து தடுத்த ஓ.பி.எஸ்ஸை நிச்சயம் எவ்வளவு பாராட்டினாலும் அது தகும். அவருக்குப் பின்னணியில் யார் உள்ளனர் என்பதெல்லாம் அடுத்துதான். ஆனால் சசிகாலவை தடுத்து நிறுத்திய அந்த ஒரே ஒரு காரணம் மட்டும் போதும் ஓ.பி.எஸ்ஸைப் பாராட்ட.
மக்களின் ஆதரவு நிச்சயம் எப்போதும் ஓ.பிஎஸ்ஸுக்கே என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. நாளையே தேர்தல் வந்தால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமையும் அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களுக்கோ அல்லது அவருக்கு ஆதரவு தரப் போகும் எம்எல்ஏக்களுக்கோ டெபாசிட் கூட கிடைக்காது என்பதை இப்போது அடித்துச் சொல்லி விடலாம்.
ஓ.பி.எஸ். சார்.. ஒரு வேளை நீங்கள் தோற்றாலும் வென்றவரே.. மக்கள் மனதில் நின்றது நீங்கள் மட்டும்தான்!