காவிரி: திருச்சியில் மீண்டும் இரவில் போராட்டம் என மாணவர்கள் எச்சரிக்கையால் பதற்றம்- போலீஸ் குவிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, திருச்சியில் திடீரென 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, திருச்சியில் திடீரென 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரவிலும் மீண்டும் போராட்டம் நடைபெறும் என மாணவர்கள் அறிவித்துள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் ரயில் மறியல் போராட்டங்கள், சாலை மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று போராட்ட களத்தில் இறங்கியுள்ளன.

இந்த நிலையில், இந்தப் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என்று பல்வேறு கட்சிகள், அமைப்புகள் வலியுறுத்தின. சிஎஸ்கே - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையே நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடந்தது. அதை நடத்தக் கூடாது என்று சேப்பாக்கம் மற்றும் அண்ணாசாலையில் மிகப் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. இதனால், அண்ணா சாலை, போர்க் களமாக காட்சி அளித்தது.
பாமக உள்பட பல்வேறு கட்சிகளின் இன்றும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், திருச்சியில், 500க்கும் அதிகமான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் குவிந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக் கோரி கடந்தாண்டு போராட்டம் நடந்த பகுதியில் இந்தப் போராட்டம் நடந்ததால், பதற்றம் ஏற்பட்டது.
சில நிமிடங்களில் கூட்டம் அதிகரிக்கவே, போலீசார் மாணவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். அப்போது, நாங்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம்.. ஆனால் இரவில் மீண்டும் போராட்டம் நடைபெறும் என மாணவர்கள் எச்சரித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பாக காட்சி அளிக்கிறது. மீண்டும் போராட்டக்காரர்கள் வராமல் இருக்க, போலீசார் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications