விமான டயர் வெடித்தது.. "வசந்த் அன் கோ" வசந்தகுமார் உள்பட 72 பேர் தப்பினர்... தூத்துக்குடியில்!
தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது அதன் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் அலறினர். ஆனால் விமானி சாதுரியமாக விமானத்தை பத்திரமாக நிறுத்தினார். விமானத்தில் பயணித்த நான்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்த் அன் கோ வசந்தகுமார் உள்ளிட்ட 72 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இன்று காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரு தனியார் விமானம் புறப்பட்டது. அதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார் உட்பட 72 பேர் பயணித்தனர். விமானம் காலை 10 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் தரை இறங்கத் தொடங்கியது. அப்போது விமானத்தின் பின்பகுதியில் உள்ள இடது பக்க டயர் திடீரென வெடித்தது.
இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். விமானம் விபத்துக்குள்ளாகி விடுமோ என்று அவர்கள் பீதியடைந்தனர். ஆனால் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினர். இதையடுத்து விமானத்தில் இருந்த 72 பயணிகளும் பத்திரமாக இறங்கினர்.
இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்ல இருந்த விமானம் இயக்கப்படவில்லை. ஆகவே அதில் செல்ல இருந்த பயணிகள் தூத்துக்குடி விமான நிலையத்தில் காத்திருந்தனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என தனியார் விமான நிறுவனம் தெரிவித்தது.