பெட்ரோல், டீசல் விலை உயர்வு… மக்களின் துயரத்தை உணராத எண்ணெய் நிறுவனங்கள்… வேல்முருகன் கண்டனம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மக்களின் பெருந்துயரத்தை உணராத எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளன என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரூபாய் நோட்டுத் தட்டுப்பாட்டு, வறட்சி, கடுமையான விலைவாசி உயர்வு என மக்கள் துயரத்தில் அல்லல்படும் சூழலில் பெட்ரோல், டீசல் விலையை மிகக் கடுமையாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கிறது என்ற காரணத்தைக் காட்டி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.21-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.79-ம் உயர்த்தப்பட்டுள்ளன.
இதனால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.58-ல் இருந்து ரூ.68.41-ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.56.10-ல் இருந்து ரூ.58.28-ஆகவும் உயர்ந்துள்ளன. ஏற்கனவே வறட்சி காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகிற துயரம் தொடருகிறது.
மத்திய அரசு அறிவித்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் கையிருப்பைக் கூட பயன்படுத்த முடியாத நிலையில் ஒரு மாதத்துக்கும் மேலாக மக்கள் பெரும் துயரத்தில் இருந்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை தொலைத்துவிட்டு நடுத்தெருவில் நிற்கின்றனர்.
இயற்கை பேரிடர் ஒருபக்கம் தாக்க.. வறட்சி மறுபுறம் வாட்ட மக்கள் வதைபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த துயரத்தை உணராமல் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மிகக் கடுமையாக உயர்த்தி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசே தம் வசம் வைத்துக் கொண்டு நாட்டின் அடித்தட்டு மக்களைப் பாதிக்காத வகையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்:
மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.21 காசுகளும், டீசல் விலை 1.79 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. சில நாட்கள் முன்பு மானிய விலை சிலிண்டருக்கான விலை உயர்த்தப்பட்டது. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை சங்கிலித் தொடர்போல் அதிகரிக்கும் என்பதை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களைத் தொட்ட போது பெட்ரோலியப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது கச்சா எண்ணெய் விலை 55 டாலர்களே என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். பெட்ரோலியப் பொருட்களின் மீது வரி விதிப்பதன் மூலம் அனைத்து மக்களின் மீதும் வரிச் சுமையை ஏற்றி சுரண்டுவதே அரசின் கொள்கையாக உள்ளது. பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பெட்ரோல் விலைக் குறைப்பின் போதெல்லாம், கலால் வரி உயர்த்தப்பட்டு, மக்களுக்கு விலைக் குறைப்பின் பலன்கள் கிடைக்காமல் செய்தது.
ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய பாஜக அரசின் நடவடிக்கையால் அனைத்து பகுதி மக்களும் சொல்லொணா துயரத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்ற நடவடிக்கையானது சாமானியர்கள் மீது மேலும் சுமையேற்றுவதாகும். இது பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளின் மற்றுமொரு வெளிப்பாடேயாகும். மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்வதோடு, பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரி ஏற்றத்தையும் திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என்று ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சிபிஎம் மாநில செயலாளர் முத்தரசன்:
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. பெட்ரோல் விலை ரூ.2.21 ம், டீசல் விலை ரூ.1.79 ம் உயர்த்தப்பட்டுள்ளன.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 68.41-க்கும், டீசல் விலை 58.28-க்கும் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது கடும் கண்டனத்திற்குரியது.
நாட்டில் பல பகுதிகளில் வறட்சி பாதித்துள்ளது. இயற்கை சீற்றங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால் இது போன்ற எத்தகைய சூழலையும் கணக்கில் கொண்டதாக தெரியவில்லை.
சர்வதேச சூழலில் ஏற்ற இறக்கங்களை ஆராய்ந்து அதற்கு ஏற்ப முடிவுகளை எடுப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறினாலும், அவைகள் எப்போதும் விலையை உயர்த்துவதையே குறிக்கோளாக கொண்டுள்ளன.
எனவே, விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு நிர்பந்திக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.