ஐஏஎஸ் தேர்வில் "வசூல்ராஜா" ஸ்டைல் காப்பி.. ஐபிஎஸ் அதிகாரியின் வேலை விரைவில் காலி!
சிவில் சர்வீஸ் தேர்வில் நூதன முறையில் காப்பி அடித்த ஐ.பி.எஸ் அதிகாரியின் பணி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை : சிவில் சர்வீஸ் தேர்வில் நூதன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காப்பி அடித்ததாக ஷபீர் கரீம் என்கிற ஐ.பி.எஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரது வேலை பறிபோவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அன்று, 2017ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட எழுத்துத்தேர்வு நடந்தது. இதில் சென்னை எழும்பூர் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியில் தேர்வெழுதிய ஷபீர் கரீம் என்பவர் காப்பி அடித்ததற்காக போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஷபீர் கரீம் ஐ.பி.எஸ் அதிகாரி என்பதும், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உதவி காவல்துறை கண்காணிப்பாளாராக பணிபுரிந்தவர் என்பதும் தெரியவந்தது.
தேர்வில் செல்போன், அதனுடன் ப்ளூடூத் மூலம் இணைக்கப்பட்ட பட்டன் கேமரா மற்றும் வயர்லெஸ் ஹெட்போன்களைப் பயன்படுத்தி, ஹைதராபாத்தில் உள்ள தன் மனைவியிடன் இருந்து கேள்விக்கு பதில் கேட்டு எழுதியதும் தெரியவந்தது.
மேலும், தேர்வில் காப்பி அடிக்க உதவி செய்ததாக அவரது மனைவி ஜோய்ஸ் ஜியா மற்றும் இவர்கள் நடத்திவந்த சிவில் சர்வீஸ் கோச்சிங் நிறுவனமான லா எக்ஸலன்ஸின் நிர்வாகி ராம்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து பேசிய உள்துறை அமைச்சக அதிகாரிகள், கைது செய்யப்பட்ட உடனேயே உள்துறை அமைச்சகத்தில் இருந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. எந்த ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி கைது செய்யப்பட்டாலும் 48 மணி நேரத்தில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கான பணிகளும் நடந்துகொண்டு இருக்கிறது.
தற்போது எந்த மாநிலத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் பணிபுரிகிறாரோ, அந்த மாநில அரசு தான் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யவேண்டும். அந்தக் கடிதம் கிடைத்ததும் மத்திய உள்துறை அமைச்சகம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அவரது வேலை பறிபோவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். இருந்தாலும் தனது தரப்பை எடுத்துரைக்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.
ஷபீர் கரீம் 2015ம் ஆண்டு முதல்முறையாக சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, 112வது ரேங்க் பெற்று ஐ.ஏ.எஸ் கிடைத்தும் ஐ.பி.எஸ் பணியைத் தேர்வு செய்தார் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications