பழனியில் நிகழ்ந்த அதிசயம்..கோபுர கலசம் பொருத்தும் போதே வானத்தில் வட்டமிட்ட கருடன்..பக்தர்கள் பரவசம்
பழனி: கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறும் முன்பாக கலசத்தில் புனித நீர் ஊற்றுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வானத்தில் கருடன் வட்டமிடும். அதை தரிசனம் செய்த பின்னர் கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் நடைபெறும். பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே கருவறை கோபுரத்தின் மீதும் ராஜ கோபுரத்தின் மீதும் கருடன் வட்டமிட்டு ஆசி வழங்கி பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. ராஜகோபுரத்தில் தங்க கலசம் பொருத்தும் பணியின் போதே கருடன் வட்டமிட்டு பின்னர் நொடிப்பொழுதில் மறைந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
நம் நாட்டில், எந்தக் கடவுளுக்குரிய ஆலயங்களின் குடமுழுக்கு விழா நிகழ்ச்சியிலும், குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறதா என்பதையே மிகவும் முக்கியமாகப் பார்ப்பார்கள். எந்த கோவிலாக இருந்தாலும் கருடன் வந்து கோபுரத்தின் மீது வட்டமிட்ட பின்னரே குடமுழுக்கு நடைபெறுவது வழக்கம். கருடன் ஏன் கோவில் கோபுரத்தின் மீது வட்டமிடுகிறது என்று பார்க்கலாம்.
கருடன் பட்சி ராஜன். பெருமாளின் வாகனம். பெருமாள் ஆலயங்களில் கருட வாகனத்தில் எழுந்தருளும் காட்சியைப் பார்க்கவே ஏராளமானோர் கூடுவார்கள். குடமுழுக்கு நடைபெறும் போது அங்கு ஆறுகால யாக பூஜைகள் நடைபெறும். அந்த யாக பூஜைகள் திருப்தியாக இருந்தது என்பதை உணர்த்தவும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றுள்ள பக்தர்களுக்கு ஆசி வழங்கவுமே கருடபட்சிகள் கோபுரத்தின் மீது வட்டமிடுகிறது என்பது நம்பிக்கை.
கோபுரத்தின் கருடன் வட்டம் இடாமல் இருந்தால், யாகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கலாம் என்று முடிவு செய்வார்கள். கருடன் வட்டமிடும் காத்திருப்பார்கள். வானத்தில் கருடனைப் பார்த்த பின்னரே கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்.
இதற்கு காரணம் கருடன் வேத வடிவமானவன். வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் ஒரு சடங்கில் வேத வடிவமான கருடன் எழுந்தருள்வது தானே முறையாகும். எனவேதான் கருட தரிசனத்திற்கு பிறகே கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அதே போல திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் போதும் கடற்கரையில் வானத்தில் கருடன் வட்டமிட்டு ஆசி வழங்கும். சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் திருவாபரண பெட்டி ஊர்வலமாக கொண்டு வரும் போது கூடவே காவலுக்கு கருடன் வருவது இன்றைக்கும் வாடிக்கையாக உள்ளது.
கருடனை வணங்கினால் சகலவிதமான நன்மைகளும் பெருகும். கண் பார்வை குறைபாடுகள் அகலும் பகையும் பிணியும் நீங்கும். செல்வளம் கொழிக்கும். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம்.
ஆயிரக்கணக்கான மந்திரங்களில் கருட மந்திரமான கருட பஞ்சாக்ஷரிக்குத் தனிச் சிறப்பு உண்டு.
தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பக்ஷாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்
என்று சொல்லி கருடனை வணங்கலாம். கருட தண்டகத்தை பாராயணம் செய்து வந்தால் எதிரிகள் தொல்லை ஒழிந்து போகும். நோய் நொடிகள் அண்டாது. விஷ ஐந்துக்களால் எந்த விதமான துன்பமும் ஏற்படாது என்பது நம்பிக்கை.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வடபழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு நடைபெற்ற போது நான்கு கருடன்கள் ஒன்றாக வட்டமிட்டதைப் பார்த்து கூடியிருந்த அனைவரும் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்று முழுக்க மிட்டனர். அதன் பிறகே குடமுழுக்கு நடைபெற்றது. இந்த ஆண்டு பழனி முருகனுக்கு வரும் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த டிசம்பர் மாதம் பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. கடந்த 18ஆம் தேதி முதல் பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளன. கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்பதற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் ராஜகோபுரம், கருவறை கோபுரங்களின் மீது புதுப்பிக்கப்பட்ட தங்கக் கலசங்கள் பொருத்தப்பட்டன. கோவில் நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ வந்த கருடன் ராஜ கோபுரத்தையும், முருகன் கருவறை கோபுரத்தையும் மூன்று முறை வட்டமிட்டு மறைந்தது. அதைப்பார்த்த அனைவருக்கும் மெய்சிலிர்த்தது. கந்தனுக்கு அரோகரா..பழனி தண்டாயுதபாணிக்கு அரோகரா என்று முழக்கமிட்டு தீபாராதனை காட்டி வழிபட்டனர்.
பழனி கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் ஆகம விதிப்படியே அனைத்தும் நடைபெறுவதாக கூறி வருகிறார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. இந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்கு முன்பாகவே கருடபகவானின் ஆசி கிடைத்து விட்டதாக முருக பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.