லாரி மோதி உயிரிழந்த 3 மாணவிகளுக்கு அரசு நிவாரணம் வழங்குக: விஜயகாந்த்
சென்னை: சென்னை கிண்டியில் தண்ணீர் லாரி மோதி உயிரிழந்த 3 மாணவிகளின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கிண்டி அருகே, கத்திபாரா மேம்பாலத்திற்கு சற்று தொலைவில் உள்ள செல்லம்மாள் கல்லூரி அருகே நேற்றுசாலையை கடக்க முயன்ற மாணவிகள் மீது தண்ணீர் லாரி மோதியது. இந்த ஒப்பந்த லாரி அதிவேகமாக வந்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் சித்ரா, ஆயிஷா மற்றும் காயத்ரி ஆகிய 3 கல்லூரி மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். படுகாயமடைந்த மேலும் 3 பேர் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி உரிமையாளரிடம் விசாரணை நடத்தி தப்பிச்சென்ற லாரி டிரைவர் விருதுநகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். லாரி பிரேக் பிடிக்காத காரணத்தினாலே விபத்து ஏற்பட்டதாக டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சம்பவத்தை கண்டித்தும், பஸ் கல்லூரி வளாகத்திற்குள் வர வேண்டும் என வலியுறுத்தியும் மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் காரணமாக இன்று கல்லூரிக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த சம்பவத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.
லாரி ஓட்டுநருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். தண்ணீர் லாரி மோதி உயிரிழந்த 3 மாணவிகளின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
செல்லம்மாள் கல்லூரி அருகே உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் கல்லூரி தொடங்கும் போதும் முடியும் போதும் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.