கோடி கணக்கில் பணம்.. எம்எல்ஏக்களை வளைத்து கையும் களவுமாக சிக்கிய அதிமுக அரசு.. விழிப்பாரா ஆளுநர்?
எம்எல்ஏக்களுக்கு கோடி கணக்கில் பணம் கொடுத்து மன்னார்குடி கும்பல் வளைத்துள்ளது அம்பலமாகியுள்ளது.
சென்னை: எம்எல்ஏக்களுக்கு கோடி கணக்கில் பணம் கொடுத்து மன்னார்குடி கும்பல் வளைத்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதுவரை ஆதாரமில்லாமல் கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டு தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளதால் இனியாவது ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நாள்தோறும் பல பிரேக்கிங் செய்திகளையும் அதிரடி திருப்பங்களையும் சந்தித்து வருகிறது தமிழக அரசியல். இதுவரை தமிழ் தொலைக்காட்சிகளை மட்டுமே அதிர வைத்த பிரேக்கிங் செய்திகள் இன்று தமிழக அரசியலை தேசிய தொலைக்காட்சிகள் வரை கொண்டு சென்றுள்ளன.
தேசிய தொலைக்காட்சிகள் அனைத்தும் தமிழக எம்எல்ஏக்கள் சசிகலா கோஷ்யிடம் கோடிக்கணக்கான பணத்துக்கு விலை போனதை காட்டி வருகின்றனர். ரகம் வாரியாக பிரித்து எம்எல்ஏக்களை சசிகலா கும்பல் வளைத்துள்ளது அம்பலமாகியுள்ளது.
கூவத்தூரில் எம்எல்ஏக்கல்
கடந்த பிப்ரவரி மாதம் யார் ஆட்சி அமைக்கப்போவது என்ற கேள்வி இந்திய அரசியலில் பெரும் இடம் பிடித்தது. எம்எல்ஏக்களை கூவத்தூரில் அடைத்து சகல விருந்துளையும் கொடுத்தது மன்னார்குடி கும்பல்.
அப்போதே கூறிய ஓபிஎஸ் அணி
அப்போதே சசிகலா கும்பல் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு கோடி கணக்கில் பணமும் கிலோ கணக்கில் தங்கமும் தருவதாக ஓபிஎஸ் அணியினர் குற்றம்சாட்டினர். ஆனால் இதனை சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் மறுத்து வந்தனர்.
பெரிய ஊழல்
இந்நிலையில் அதிமுக மற்றும் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் சசிகலா கோஷ்டியிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றது அம்பலமாகியுள்ளது. இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பெரிய ஊழல் நடந்திருப்பது இந்திய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடவடிக்கை எடுப்பாரா ஆளுநர்?
பணத்தால் எதையும் செய்ய முடியும் என்பதை சசிகலா கோஷ்டி நிரூபித்து இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் பணத்திற்கு விலைபோன எம்எல்ஏக்களை தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.