மனைவி கட்டையால் அடிச்சிட்டாங்க மை லார்ட்... கிரானைட் வழக்கில் பல்டியடித்த வி.ஏ.ஓ அக்பர் சேட்
மேலூர்: நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு சாட்சியம் அளிக்க வரும் போது தனது மனைவி, கட்டையால் தனது தலையில் தாக்கியதால், அன்று வாக்குமூலத்தை மாற்றிக் கூறிவிட்டதாக கீழையூர் கிராம நிர்வாக அலுவலர் மு.அக்பர்சேட் கூறியுள்ளார். வேலையை விட்டு சஸ்பென்ட் செய்யப்பட்டதை அடுத்து தற்போது மீண்டும் தனது சாட்சியத்தை மாற்றிக்கூறி அந்தர்பல்டி அடித்துள்ளார் அக்பர் சேட்.
மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த கிரானைட் குவாரிகளின் உரிமையாளர்கள் குத்தகை உரிமம் வழங்கப்படாத பட்டா நிலங்களில் கிரானைட் கற்களை அடுக்கி வைத்திருந்தனர். அரசு விதிகளின்படி வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கற்களை, உரிமம் வழங்கப்பட்ட பகுதியில் மட்டுமே இருப்பு வைக்க வேண்டும். அனுமதி வழங்காத பட்டா நிலத்தில் இருப்பு வைத்திருந்தால், அந்த கற்கள் அரசுடைமையாக்கப்படும். இதன்படி, மேல் நடவடிக்கை எடுப்பதற்காக மேலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 180 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கிரானைட் கற்கள் பறிமுதல்
இதில் மேலுார் அருகே கீழையூரில் பி.ஆர். பழனிச்சாமி அவரது மகன் சுரேஷ்குமார் ஆகியோருக்கு 11 சர்வே எண்களில் இடம் உள்ளது. அதில் 4962.622 க.மீட்டர் அளவுள்ள 679 வகையான கிரானைட் கற்களை, அரசு அனுமதி இல்லாமல் அடுக்கி வைத்துள்ளனர். இக்கற்களை அரசுடமையாக்க கோரி, மேலுார் நீதிமன்றத்தில் முந்தைய கலெக்டர் அன்சுல் மிஸ்ரா வழக்கு தொடர்ந்தார்.
வி.ஏ.ஓ சாட்சியம்
இவ்வழக்கு நவம்பர் 6ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சாட்சி யான வி.ஏ.ஓ., அக்பர் சேட், அவை கிரானைட் கற்கள் அல்ல; கழிவுக்கற்கள். கற்களை கையகப்படுத்தியதாக சுரங்கத்துறையில் வைத்து கையெழுத்து வாங்கினர்,'' என பிறழ்சாட்சியம் அளித்தார்.
அவரை பிறழ் சாட்சியாக மாறுதல் செய்யக் கோரி அரசு சிறப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதன்படி, பிறழ் சாட்சியாக அனுமதிக்கப்பட்டார்.அவரை குறுக்கு விசாரணை செய்வதற்காக நவம்பர்18 ஆம் தேதி ஆஜராகுமாறு கோரப்பட்டிருந்தது. அன்றைய தினம் அவர் ஆஜராகவில்லை.
அக்பர் சேட் சஸ்பென்ட்
அக்பர் சேட் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்குமாறு அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஞானகிரி, ஷீலா ஆகியோர் மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக் கொண்டனர். அதையடுத்து, மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் உத்தரவின்பேரில், கீழையூர் கிராம நிர்வாக அலுவலர் மு.அக்பர் சேட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் விசாரணை
இந்த நிலையில் கிரானைட் முறைகேட்டு வழக்கில் அக்பர்சேட் பிறழ்சாட்சியமாக மாற்றப்பட்டு அவரிடம் இன்று குறுக்கு விசாரணை நடைபெற்றது. மேலூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணையின் போது அக்பர்சேட் கூறியது சுவாரஸ்யமாக இருந்தது.கிரானைட் கற்கள் பற்றி விவரம் தெரியாததால் அன்று கழிவுக் கற்கள் என கூறிவிட்டேன் என்று கூறினார்.
மனைவி தாக்கிவிட்டார்
நவம்பர் 6ம் தேதி விசாரணைக்கு வரும் போது என் தலையில் மனைவி கட்டையால் தாக்கியதால் அன்று அவ்வாறு மாற்றி கூறிவிட்டேன் என்று தெரிவித்தார்.மேலும், கிரானைட் கற்கள் தன் முன்னால் தான் பறிமுதல் செய்யப்பட்டன என்று இன்று நீதிமன்றத்தில் கூறினார் அக்பர்சேட். வி.ஏ.ஓ திடீரென அந்தர்பல்டி அடித்தது நீதிமன்றத்தில் சிரிப்பலைகளை உருவாக்கியது.