தியேட்டர் கட்டணத்தை முறைப்படுத்தினால் கேளிக்கை வரி பரிசீலனை... எடப்பாடி கண்டிஷன் போடுவாரா?
தியேட்டர் உணவக கட்டணங்களை முறைப்படுத்தினால் கேளிக்கை வரி குறித்து பரிசீலனை செய்வோம் என்று தமிழக அரசு தங்கள் நிலைப்பாட்டை மக்கள் நலனுக்கானதாக எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
சென்னை: சுயநலத்துக்காக போராட்டம் நடத்திய தியேட்டர் உரிமையாளர்களுக்கு துணை போகாமல் மக்கள் நலனில் தமிழக அரசு அக்கறை காட்ட வேண்டும்.
கடந்த 1-ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதில் தியேட்டர் கட்டணங்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ரூ.100 வசூலிக்கும் திரையரங்குகளில் டிக்கெட் ஒன்றுக்கு 18 சதவீதமும், ரூ.120 வசூலிக்கும் திரையரங்குகளில் டிக்கெட் ஒன்றுக்கு 28 சதவீதமும் வரி வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டம்
ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி என இரட்டை வரி முறையை எதிர்த்து திரையரங்க உரிமையாளர்கள் கடந்த 4 தினங்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரைத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

புதிய குழு
கேளிக்கை வரி போட வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் சினிமா துறை சார்பில் 8 பேர் இருக்கின்றனர். அது தவிர அரசு சார்பில் 6 பேரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். சரி தியேட்டர் உரிமையாளர்களின் பிரச்சினைகள் கிட்டதட்ட முடிந்து விட்டதாகவே கருதப்படுகிறது.

சுயநலத்துக்காக...
ஜிஎஸ்டி வரியால் டிக்கெட் விலை உயர்ந்ததோடு அல்லாமல் தியேட்டர்களில் உள்ள திண்பண்ட கடைகளில் பொருள்களின் விலை டிக்கெட் கட்டணத்தை விட உயர்ந்துவிடும். இதனால் நடுத்தர மக்கள் எத்தகைய அளவில் பாதிக்கப்படுவர் என்பது குறித்து கொஞ்சமும் சிந்திக்காமல் தியேட்டர் உரிமையாளர்கள் தங்கள் நலனில் மட்டும் அக்கறை கொண்டுள்ளனர்.

அழுத புள்ள...
அழுத புள்ளதான் பால் குடிக்கும் என்பார்கள். அதுபோல் கேட்டால் கிடைக்கும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்காக தியேட்டர் கட்டணத்தையும், உள்ளே விற்கும் ஸ்னாக்ஸ் கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் போராட முடியுமா.

தியேட்டர் உரிமையாளர்கள்
தியேட்டர் உரிமையாளர்களுக்கு மாநில அரசு பணிந்து செல்லாமல் அவர்களை பணிய வைக்க வேண்டும். தியேட்டர்களில் விற்கப்படும் ஸ்னாக்ஸ், வாகன நிறுத்துமிட கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை குறைக்க சொல்ல வேண்டும். தியேட்டர்கள் நடுத்தர மக்கள் உணவு இடைவேளையின் போது சாப்பிட வீட்டிலிருந்து உணவு பொருள்கள் கொண்டு வந்தால் அதை தியேட்டர் ஊழியர்கள் எடுத்துக் கொண்டுதான் உள்ளேயே அனுப்புகின்றனர். எனவே குறைந்தபட்சம் தியேட்டரில் விற்கும் பொருள்களைத்தான் உண்ண வேண்டும் என்ற கட்டாயப்படுத்துவதையாவது நிறுத்த வேண்டும் என்று நிர்பந்திக்க வேண்டும். அப்போதுதான் கேளிக்கை வரி குறித்து பரிசீலனை செய்வோம் என்று அரசு கண்டிப்பாக கூறவேண்டும்.

தமிழக மக்கள் பக்கம்
ஏற்கெனவே ஜிஎஸ்டியால் அனைத்து பொருள்களின் கட்டணங்களும் அதிகரித்துள்ள நிலையில், குறைந்தபட்சம் தியேட்டரில் நடத்தப்படும் கொள்ளையை தடுத்து மக்கள் பக்கம் நிற்க வேண்டும். இல்லையெனில் அரசுக்கும் அவப்பெயர் ஏற்படும். தற்போது தியேட்டர் அதிபர்களளன் குடுமி அரசின் கையில் உள்ளதால் அவர்களை தங்கள் வழிக்கு கொண்டு வர பாடுபட வேண்டுமே தவிர அரசு அவர்களுக்கு ஆதரவு அளிப்பது மக்களுக்கு செய்யும் துரோகமாகவே கருதப்படும்.












Click it and Unblock the Notifications