சென்னையில் இடி, மின்னலுடன் கன மழை.. சாலைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல்
சென்னை: பகல் நேரத்தில் வெயில் வாட்டிய நிலையில் மாலையில் மேகக் கூட்டங்கள் திரண்டு கன மழை கொட்டியதால் வெப்பம் தணிந்து சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெப்பம் காய்ந்தும், மாலை நேரங்களில் கன மழை கொட்டி வருகிறது. புறநகர்களிலும் இதே சூழல் தான்.

இந்நிலையில், வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் இன்றும் பகல் நேரத்தில் சற்று வெப்பம் காணப்பட்ட நிலையில், இரவு சுமார் 8 மணியளவில் மழை கொட்டத் தொடங்கியது.
வடபழனி, கோயம்பேடு, கோடம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாபூர், அஷோக்நகர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இடிமின்னலுடன் கன மழை கொட்டித் தீர்த்தது.
பட்டினப்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் மிதமான மழையைக் காண முடிந்தது. வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்கள் தாழ்வான பகுதிகள் என்பதால், அங்கு மழைநீர் சாலைகள் தெரியாத அளவிற்கு தேங்கியது.
மேலும் சென்னை நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மாலை அலுவலகத்தில் பணி முடித்து திரும்பியவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.
பல மணி நேரங்களுக்குப் பிறகே போக்குவரத்து சற்று சீரானது. சென்னையில் மழை கொட்டித் தீர்த்த வேளையில், புறநகர்களில் மழை இல்லை. மாறாக நல்ல வெயிலும், கடும் புழுக்கமும் ஏற்பட்டது. அதேசமயம், காற்று வீசி வருவதால் மழையை எதிர்பார்த்து மக்கள் காத்திருந்தனர்.












Click it and Unblock the Notifications