இனி ஊட்டியை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்கலாம்... அமைச்சர் நடராஜன் தகவல்
வரும் காலங்களில் சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்த ஊட்டியை ஹெலிகாப்டரில் சென்று சுற்றிப்பார்க்கலாம் என்றும் அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துவருகிறது என்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார்.
ஊட்டி: ஊட்டியில் ஹெலிகாப்டர் சேவை தொடங்க முழு முயற்சி மேற்கொள்ளப்படும் என சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி கோடை விழாவின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
"ஊட்டியில் ஹெலிகாப்டர் சேவை தொடங்க முழு முயற்சி மேற்கொள்ளப்படும். நிலுவையில் உள்ள ரோப் கார் திட்டம் நிறைவேற முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. இதனால் பார்க்கிங் வசதி, சாலை வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது." என்று கூறினார் வெல்லமண்டி நடராஜன்.
முன்னதாக அவர், ஊட்டி படகு இல்லத்துக்கு சென்று பார்வையிட்டார். அவருடன் மாவட்ட ஆட்சியர் சங்கரும் சென்றார். அப்போது படகு இல்லத்தில் ஆகாய தாமரை, பிளாஸ்டிக் கழிவுகள் ஏரியில் கலக்காமல் இருக்க தடுப்பு வேலிகள் ஆகியவை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அதிகரிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.