நெல்லை கோயிலில் அகழாய்வு- பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
நெல்லை: நெல்லையில் தொல்லியல் துறை சார்பில் நெல்லையப்பர் கோவிலில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் பல அரிய பொருட்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
வரலாற்று சிறப்பு மிக்க நெல்லையப்பர் கோவிலில் தொல்லியல் கண்காணிப்பாளர் மூர்த்திஸ்வரி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், "கோயில் உள்பிரகாரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் சில பகுதிகளில் கோயில் தொடர்பான வரலாற்று பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக கல்வெட்டுகள் கிடைக்கலாம்.
எனவே தற்போதுள்ள தரைமட்ட பகுதியின் கீழ் பகுதியான ஜெகதீ எனப்படும் இடம் வரை தோண்டி அகழ்வு செய்ய வேண்டும்" என்று அறநிலைய துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் நெல்லையப்பர் கோவிலில் உள்ள வசந்த மண்டபம், நால்வர் சன்னதி பின்புறம் உள்ள சைலப்பர் சன்னதி கோயில் ஆகிய இடங்களில் அகழாய்வு பணி தற்போது நடந்து வருகிறது. இந்த ஆய்வின் போது நெல்லையப்பர்,காந்திமதி அம்பாளுக்கு சந்தனம் அரைக்கும் கல் மற்றும் சந்தானதி என அழைக்கப்படும் சுயம்பு மூர்த்திக்கு தலைம் அரைக்கும் சிறிய கல் செக்கு மற்றும் உடைந்த கை, கால் போனற கல் சிற்பங்கள், அபிஷேகம் செய்ய பயன்படுத்திய கல்லில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி, யாழி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் பலங்கால கல்வெட்டுகள் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இந்த ஆய்வின் போது கல்வெட்டு கிடைத்தால் கோயிலின் வரலாற்றுகுறித்து புதிய தகவல் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில் எடுக்கப்ப்ட்ட பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுளளது. தொல்லியல் துறைகண்காணிபபாளர் மீண்டும் அதை ஆய்வு செய்ய உள்ளனர்.