சிறுதாவூர் பங்களாவில் தீ பற்றியது எப்படி?' - பதற வைக்கும் பின்னணி
சிறுதாவூர் பங்களாவில் இரு முறை தீவிபத்து ஏற்பட்டும் இதுவரையில் கார்டன் ஆட்கள் வரவில்லை. அங்கு மர்மமான சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன என்றனர் மக்கள்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் அப்பகுதி மக்கள். ' ஜெயலலிதா இறந்த பிறகு இரண்டு முறை தீ விபத்து ஏற்பட்டது. இதுவரையில் கார்டன் ஆட்கள் வரவில்லை. மர்மமான சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன' எனவும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்திருக்கிறது சிறுதாவூர். முதல்வர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஜெயலலிதாவின் விருப்பத்துக்குரிய ஓய்வு பங்களாவாக இது இருந்தது. அவரது மரணத்துக்குப் பிறகு சசிகலா உறவினர்கள் சிலர் இந்த பங்களாவுக்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் பங்களா அருகில் ஒருவர் இறந்து கிடந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில ஆவணங்கள் எரிக்கப்பட்டதற்கான தடயங்களும் இருந்தன. முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பதற்கு முன்பு வரையில் 250 காவலர்கள் வரையில் பங்களா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தன.
மரங்களும் தீக்கிரை
இந்தப் பாதுகாப்பு படிப்படியாகக் குறைக்கப்பட்டு, இப்போது சிறப்பு காவல்படையைச் சேர்ந்த மூன்று காவலர்கள் மட்டுமே காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தினகரன் தரப்பில் அமர்த்தப்பட்டுள்ள பத்து செக்யூரிட்டிகளும் பங்களாவைப் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை 6.30 மணிக்கு திடீரென பற்றிய தீ, சிறுதாவூர் பங்களாவைச் சுற்றி வளைத்தது. சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் நன்கு வளர்ந்த கோரைப் புற்களும் சவுக்கு மரங்களும் தீக்கிரையானது.
நிலங்களை
இந்த விபத்து குறித்து சிறுதாவூர் பகுதி வாசிகளிடம் பேசினோம். " பங்களாவுக்குச் சொந்தமாக 64 ஏக்கர் நிலம் உள்ளது. இதுதவிர, 40 ஏக்கர் நிலம் ஆக்ரமிப்பில் உள்ளது. பங்களா அருகில் இருந்த தனியாருக்குச் சொந்தமான நிலங்களையும் சசிகலா தரப்பினர் வளைத்து வைத்திருந்தனர்.
கோரைப்புற்கள் தீ
அம்மா இருந்தவரையில்தான் பங்களாவுக்கு மதிப்பு இருந்தது. சசிகலா உறவினர்கள் என்று கூறிக் கொண்டு இளவயதுள்ள சிலர் உள்ளே வருவார்கள். ஆடி கார் உள்பட காஸ்ட்லியான வாகனங்களில் வருவார்கள். அன்று இரவு முழுக்க ஆட்டம் பாட்டமாக இருக்கும். பிறகு மறுநாள் காலையில் கிளம்பிவிடுவார்கள். ஒருகட்டத்தில் அவர்களும் வருவதை நிறுத்திவிட்டார்கள். ஜெயலலிதா இறந்த பிறகு ஒருநாள் கோரைப் புற்கள் தீப்பிடித்து எரிந்தது.
எரிந்து சாம்பல்
அது சாதாரண விபத்தாக இருந்தது. இப்போது பற்றி எரிந்த தீ விபத்து அப்படிப்பட்டதல்ல. சுமார் ஆறு மணி நேரம் போராடித்தான் தீயை அணைக்க முடிந்தது. பங்களாவுக்கு 22 அடி தொலைவில் தீ எரிந்து கொண்டிருந்தது. பாதுகாவலர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. தீயணைப்புப் படை வராவிட்டால், பங்களா முற்றிலுமாக எரிந்து சாம்பலாகியிருக்கும்.
நிறைய சம்பவம்
30 ஏக்கர் நிலங்கள் கருகிப் போய்விட்டன. கோரைப் புற்களில் தீ பற்ற வைக்கப்பட்டதா அல்லது பங்களாவைத் தரைமட்டமாக்க யாராவது முயன்றார்களா எனத் தெரியவில்லை. அம்மா மரணத்துக்குப் பிறகு சிறுதாவூர் பங்களாவில் மர்மமான முறையில் நிறைய சம்பவங்கள் நடந்து வருகின்றன" என்கின்றனர் அச்சத்துடன்.