ரயில் பெட்டிகளில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் - ஐசிஎப் மேலாளர் பேட்டி!
சென்னை: ரயில் பெட்டிகளுக்குள்ளே பயணிகளின் பாதுகாப்பிற்காக விரையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்தார். மேலும், புதிய ரயில் பெட்டி ஒன்றினை அவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே பாதுகாப்பு படை உதயமான 59வது ஆண்டு விழா சென்னை அயனாவரத்தில் உள்ள ரயில்வே மைதானத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு தெற்கு ரயில்வேயின் தலைமை பொதுமேலாளர் வஷிஷ்டா ஜோஹ்ரி தலைமை தாங்கினார்.
பாதுகாப்பு படையினர்:
ரயில்வே பாதுகாப்பு படையின் தலைமை பாதுகாப்பு கமிஷனர் எஸ்.சி.பாரி முன்னிலை வகித்தார். திறந்த ஜீப்பில் வலம் வந்தவாறு ரயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை வஷிஷ்டா ஜோஹ்ரி ஏற்றுக்கொண்டார்.
6 கோட்ட பணியாளர்கள்:
இதனையடுத்து தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய ரயில்வே பாதுகாப்பு படையினர் 8 பேர் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படையினரின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கண்காணிப்பு கேமராக்கள்:
முன்னதாக வஷிஷ்டா ஜோஹ்ரி, "ரயில் பெட்டியின் உள்ளே பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி சோதனை செய்யப்பட்டு வருகிறது. ரெயில் பயணிகளிடம் இருந்து பெறுகின்ற கருத்துக்களின் அடிப்படையில் ரயில் பெட்டியின் உள்ளே நிரந்தரமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.
தீர்வு காண நடவடிக்கை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அசம்பாவிதம், பயணிகளின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ரயில் விபத்துக்களை தடுக்க "இஸ்ரோ"வுடன் இணைந்து தொழில்நுட்ப முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதற்கான செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது.
ஜூன் மாதத்தில் நிறைவு:
மூர் மார்க்கெட் வளாகம் மற்றும் பேசின் பிரிட்ஜ் இடையேயான 5 மற்றும் 6-வது வழித்தட பணிகள் வருகிற ஜூன் மாதம் நிறைவடையும்" என்று தெரிவித்துள்ளார்.