ராமதாஸ் சொல்றதுல தப்பே இல்லை...!
சென்னை: மாணவர் பருவத்திலேயே மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். காரணம் டாஸ்மாக் என்று டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் குற்றம்சாட்டுவதில் உண்மை இல்லாமல் இல்லை.
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்து இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுவும் இளைஞர்களே அதிக அளவில் மது அருந்துவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
மது குடிப்பவர்கள்
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு நடத்திய ஆய்வில் 1992 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியர்களின் குடிப்பழக்கம்
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரப்படி 30 சதவீதம் இந்தியர்களுக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும், அதில் 4 முதல் 13 சதவீதம் பேர் நாள்தோறும் குடிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அபாயகரமான குடிகாரர்கள்
இவர்களில் 50 சதவீதம் பேர் மிகவும் அபாயகரமான குடிகார்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். முக்கியமாக இளைஞர்கள் மிக வேகமாக மது பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக கூறப்பட்டுள்ளது.
டீன் ஏஜ்கள் அதிகம்
இந்தியாவில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் டீன்ஏஜ் இளைஞர்களின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளதாக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் ஆய்வாளர் அரவிந்த் பிள்ளை தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்விலும் தெரியவந்துள்ளது.
மூன்று மடங்கு உயர்வு
"1956 - 60க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களில் டீன்ஏஜ் பருவத்தில் குடிப்பழக்கத்தை தொடங்கியவர்கள் அளவு 19.5 சதவீதம். இதுவே 1981 - 86 காலகட்டத்தில் பிறந்தவர்களில் டீன்ஏஜ் வயதில் மதுப்பழக்த்துக்கு ஆளானவர்கள் அளவு 74.3 சதவீதமாக உயர்ந்துள்ளது" என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
உளவியல் பாதிப்பு
குடிப்பழக்கத்துக்கு ஆளானவர்களின் உளவியல் பாதிப்புகளையும் இக்குழு மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில் மதுப் பழக்கமும் அதனால் ஏற்படும் தீங்குகளும் பொது சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இப்போக்கு அபாய அளவில் இருப்பதாகவும் ஆய்வை மேற்கொண்ட அரவிந்த் பிள்ளை கூறியுள்ளார்.
உயிரிழப்பு
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் குடி தொடர்பான நோய்களால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை 3.3 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.