தேர்தலுக்கு முந்தைய கடைசி சட்டசபை கூட்டம்: இன்று இடைக்கால பட்ஜெட்.. அறிவிப்பு மழை பெய்யலாம்!
சென்னை: தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசின் கடைசி சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட்டில் தேர்தலை முன்வைத்து 'ஏராளமான' அறிவிப்புகள் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆளும் அதிமுக அரசின் கடைசி சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை பகல் 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த பட்ஜெட்டில் சட்டசபை தேர்தலை முன்வைத்து ஏராளமான அறிவிப்புகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக போராட்டத்தில் குதித்த அரசு ஊழியர்களை சமாதானப்படுத்தும் வகையிலான அறிவிப்புகள் நிச்சயம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இக் கடைசி கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்று இன்று காலை சபாநாயகர் தலைமையில் நடக்கும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்த சட்டசபை கூட்டத்தில் 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதால் அனைத்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்பர்.
அரசு ஊழியர்களின் போராட்டம், மதுவிலக்கு, கெயில் எரிவாயு குழாய் விவகாரம், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சி உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் இன்று தொடங்கும் இந்த கூட்டத் தொடர் பரபரப்பாகவே இருக்கும்.