சென்னையைச் சேர்ந்த 'அதி பயங்கர' தங்கக் கடத்தல்காரரை வலைவீசி தேடும் இன்டர்போல்!
சென்னை: சென்னையைச் சேர்ந்த முகம்மது ஹனீப் என்ற பிரபலமான தங்கக் கடத்தல்காரரை இன்டர்போல் போலீஸார் அதி தீவிரமாக தேடி வருகின்றனர். இதுதொடர்பாக ரெட் அலர்ட் நோட்டீஸும் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வருவாய் புலனாய்வு இயக்குநரகமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நல்ல உயரமாக இருப்பார், நல்ல உடல் கட்டுடன் இருப்பார். நல்ல நிறத்தில் இருப்பார் என்று ஹனீப்பை வர்மித்துள்ளது.
தற்போது ஹனீப்பின் மனைவிகள் என்று கூறப்படும் 3 பெண்களிடம் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் ஹனீப் குறித்து விசாரித்துள்ளனர். அவர்களிடமிருந்து ஹனீப் குறித்த சில முக்கியத் தகவல்களும் கிடைத்துள்ளன. ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.
கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 50 கிலோ தங்கம் சிக்கியது. இவை அனைத்துமே ஹனீப்பின் மூலமாக கடத்தி வரப்பட்ட தங்கமாகும். இதை பல்வேறு நபர்கள் மூலம் ஹனீப் கடத்தியுள்ளார். இதையடுத்தே ஹனீப்பை இன்டர்போல் மூலமாக பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹனீப்பின் வீடு சென்னை ஏழுகிணறு பகுதியில் இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கடந்த காலத்தில் இதுவரை 1000 கிலோ அளவிலான தங்கத்தை ஹனீப் கடத்தி வந்திருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மியான்மர், சிங்கப்பூர், கொழும்பு, சென்னை, திருச்சூரில் வாடிக்கையாளர்களும் உள்ளனராம். அதாவது ஹனீப்பின் கடத்தல் தங்கத்தை வாங்குவோர் இங்கு அதிக அளவில் உள்ளனராம்.
மேலும் சென்னை மற்றும் கேரளாவைச் சேர்ந்த பல பிரபலமான நகைக்கடைக்காரர்களும் கூட ஹனீப்பிடம் தங்கம் வாங்குகின்றனராம். இதுவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதால் பல நகைக்கடைக்காரர்கள் கலக்கமடைந்துள்ளனராம்.
கவர்ச்சி வில்லன் போல...
அந்தக் காலத்தில் கண்ணன் என்று ஒரு வில்லன் இருந்தார். அவருக்குப் பெயர் கவர்ச்சி வில்லன் கண்ணன். அதேபோலத்தான் இந்த ஹனீப்பையும் கவர்ச்சிகரமான கடத்தல்காரன் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் செல்லமாக அழைக்கின்றனராம்.
இவர் தனது கள்ளக்கடத்தலுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்களைத்தான் பயன்படுத்துவாராம்.
எப்படிக் கடத்துவார் தங்கத்தை...
துபாய் மற்றும் சிங்கப்பூரிலிருந்து இந்த கடத்தல் தொடங்குமாம். அங்கிருந்து மியான்மர் வந்து பின்னர் மணிப்பூருக்கு சாலை மார்க்கமாக கொண்டு வருவார்களாம். அதன் பின்னர் நாட்டின் பல பகுதிகளுக்கும், சென்னைக்கும் இந்தக் கடத்தல் தங்கம் விநியோகமாகுமாம்.
மணிப்பூர் மாநிலத்தின் சந்தெல் மாவட்டத்திற்குட்பட்ட மோரே பகுதியில் தமிழர்கள் அதிகம் உள்ளனர். அவர்களில் சிலரை தனது கைப்பிடியில் வைத்துள்ளாராம் ஹனீப். அவர்கள் மூலமாகத்தான் கடத்தலை மேற்கொண்டு வருகிறாராம்.
மணிப்பூர் வந்த தங்கத்தை சிறுசிறு பகுதியாகப் பிரித்து குவஹாத்தி கொண்டு வருவார்களாம். பின்னர் சென்னைக்கு ரயிலில் அனுப்பிவைப்பார்களாம்.
விரைவில் ஹனீப் சிக்குவார். அப்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications