தடி, கல், ரப்பர் குண்டு, பாஸ்பரஸ் பவுடர், தீ வைப்பு.. இதுதான் போலீசாரின் “குறைந்தபட்ச பலபிரயோகமா”?
தடி, கல், ரப்பர் குண்டு, தீ வைப்பு என பயங்காரமாக நடுகுப்பத்தில் தாக்குதல் நடத்தியதுதான் போலீசாரின் குறைந்தபட்ச பலபிரயோகமா என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டதாகக் கூறி நடு குப்பத்தில் வசிப்போரை போலீசார் கடுமையாக தாக்கினார்கள். மேலும், அவர்களின் வாழ்வாதாரமான மீன் சந்தை தீ வைத்து கொளுத்தப்பட்டது.
இதுமட்டுமல்லாமல், நடு குப்பம், அம்பேத்கர் பாலம், ரூதர் காலனி வாழ் மக்களை போலீசார் துரத்தித் துரத்தி அடித்து காயப்படுத்தியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடாத பலரையும் போலீசார் கைது செய்து பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்தெல்லாம், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியதற்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சமூக விரோத கும்பல் போராட்டத்தில் கலந்ததால் பல முறை முறையான அறிவிப்பு செய்து பின்னர் குறைந்தபட்ச பலபிரயோகத்தை போலீசார் செய்தனர் என்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
குண்டாந்தடி
போலீசார் பயன்படுத்துவது போன்ற தடிகளை பொதுமக்கள் யாரும் பயன்படுத்துவதில்லை. அது போலீசாருக்கு பிரத்யேகமான ஒன்று. நடுகுப்பத்தில் வாழும் மீனவ மற்றும் தலித் மக்களை அடி அடி என்று போலீசார் அடித்ததால் உடைந்த கம்புகளை இப்பகுதி மக்கள் பொறுக்கி வைத்து செய்தியாளர்களிடம் காண்பித்து வருகின்றனர்.
மண்டைகளை குறி வைத்த கற்கள்
"எங்களை அடித்தவர்கள் போலீஸ்காரர்கள் இல்லை காக்கிச்சட்டையில் வந்த ரவுடிகள்" என்று பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்லும் அளவிற்கு போலீசாரின் தாக்கல் வேட்டை இப்பகுதியில் நடந்திருக்கிறது. கருங்கற்களை போலீசார் தங்களது பாக்கெட்டில் இருந்து எடுத்து பொதுமக்கள் மீது வீசியதற்கான ஆதாரங்களை சேகரித்து வைத்துள்ளனர் நடு குப்பத்து பெண்கள்.
முகமூடி
மிகக் குறைந்த அளவிற்கு பலபிரயோகம் போலீசார் செய்தனர் என்று முதல்வர் சொல்கிறார். மிகக் குறைந்த அளவிற்கு தாக்குதல் நடத்த போலீசார் ஏன் "திருடர்கள் போன்று முகத்தில் முகமூடி கட்டிக் கொண்டு வந்து எங்களை தாக்க வேண்டும்" என்று நடு குப்பத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் கேட்கும் கேள்விக்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்?
ரப்பர் குண்டு, பாட்டில் துண்டுகள்
மக்கள் மீது ரப்பர் குண்டை போலீசார் வீசினார்கள். பாட்டில்களை வீசினார்கள். அப்படி வீசப்பட்டதில் சிறுவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். ரப்பர் குண்டும், பாட்டில் ஓடுகளும் போலீசார் ஏன் வைத்திருக்க வேண்டும். வன்முறை திடீரென வெடித்தது என்றால் போலீசாருக்கு முன்பே எப்படி பாட்டில் துண்டுகள் கிடைத்தது. எங்கள் மீது பாட்டில் ஓடுகளை வீசித் தாக்க நாங்கள் யார்? என்று பெண்கள் குமுறி அழுகின்றனர்.
பலர் காணவில்லை
வன்முறையில் ஈடுபட்டதாக ஐஸ் ஹவுஸ் மற்றும் மீர்சாகிப் பேட்டையைச் சேர்ந்த 75 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மண்டை உடைந்து, எலும்புகள் முறிந்து என 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பலரை காணவில்லை. எங்கு சென்றார்கள் என்ற தகவலும் இல்லை. போலீஸ் கைது செய்துள்ளதா அல்லது வன்முறையில் மரணமடைந்தார்களா என்று கூட கண்டறிய முடியாமல் தவிக்கும் இந்த மக்களிடம் குறைந்தபட்சக் கேள்வி இதுதான்.
இதுதான் சட்டப்பேரவையில் கூறிய குறைந்த "பட்ச பலபிரயோகமா" ஓபிஎஸ்!