15 அம்ச கோரிக்கை: தமிழக அரசை கண்டித்து மறியல் போராட்டம்- பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் கைது!!
சென்னை: தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போராட்டம் நாளை மறுநாள் திங்கள்கிழமை வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ, கடந்த நான்கரை ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் உட்பட அனைத்து நிலை ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் படிகள் உட்பட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது.
கோரிக்கைகள்
அதேபோல் தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை நீக்கிவிட்டு, பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்க வேண்டும், தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை தமிழ்மொழி வழிக்கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என 15 அம்ச கோரிக்கைகளை ஜாக்டோ முன்வைத்து வருகிறது.
தொடர் மறியல்
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. இருப்பினும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மெத்தனமாக இருக்கும் தமிழக அரசைக் கண்டித்து இன்று முதல் பிப்ரவரி 1-ந் தேதி வரை தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ அமைப்பில் உள்ள ஆசிரியர் சங்கங்கள் அறிவித்திருந்தன.
மறியல் போராட்டம்
இன்று முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டம் தொடங்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் பல்லாயிரக்கணக்கில் இந்த தொடர் மறியலில் பங்கேற்று கைதாகினர்.
10,000-க்கும் அதிகமானோர்...
இன்று மாநிலம் முழுவதும் 10,000க்கும் அதிகமான ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, மதுரை, வேலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவண்ணாமலை தருமபுரி, கோவை, திருப்பூர் என அனைத்து மாவட்டங்களிலும் இப்போராட்டம் நடைபெற்றது.
பள்ளிகள் முடங்கும் நிலை...
ஒவ்வொரு ஒன்றியம் வாரியாகவும் அடுத்தடுத்து இந்த போராட்டங்களில் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இது நாளை மறுநாள் வரை நடைபெற உள்ளது. இதனால் பிப்ரவரி 1-ந் தேதி தமிழகத்தில் பள்ளிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது.