ஜெ.வின் 66 வது பிறந்தநாள்: முளைப்பாரி, பால்குடம், லட்டு, நள்ளிரவு 12 மணிக்கு கேக்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். முளைப்பாரி எடுத்தும், கோவில்களில் பால்குடம் எடுத்தும் கடந்த ஒருவார காலமாகவே சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று தனது 66வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவை வாழ்த்தி சுவரொட்டிகளையும், சாலைகளில் தோரணங்களையும் அதிமுகவினர் கட்டி உள்ளனர்.
கோயில்களில் அன்னதானம் சிறப்பு பூஜைகளுக்கும் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் பேரில் அர்ச்சனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதோடு மட்டுமல்லாது ரத்ததானம், மருத்துவமுகாம், விளையாட்டு போட்டிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தலைமைக்கழகத்தில் விழாக்கோலம்
சென்னை அ.தி.மு.க. தலைமை கழகம் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி கொடி, தோரணங்கள், பேனர்களுடன் விழா கோலம் பூண்டிருந்தது. இந்த அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை எழில் பொங்கும் இடமாக காட்சியளித்தது.
66 கிலோ கேக்
முதல்வர் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாட அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக பாராளுமன்ற வடிவிலான 66 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக் கொண்டு வரப்பட்டது. காலை 10 மணி அளவில் அகில இந்திய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன் ‘கேக்'கை வெட்டினார்.
தம்பித்துரை எம்.பி.க்கு
முதல் துண்டை அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பித்துரை எம்.பி. பெற்றுக் கொண்டார். பின்னர் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. அப்போது கூடி நின்ற தொண்டர்கள் ‘புரட்சித்தலைவி அம்மா வாழ்க' என்று உற்சாகமாக குரல் எழுப்பினார்கள்.
சாதனை மலர் புத்தகம்
விழாவில் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விவரிக்கும் ‘சாதனை மலர்' வெளியிடப்பட்டது. இதை அமைப்பு செயலாளர் பி.எச்.பாண்டியன் வெளியிட முன்னாள் அமைச்சர் பொன்னையன் பெற்றுக் கொண்டார்.
குவிந்த தொண்டர்கள்
இந்த விழாவில் பங்கேற்க காலையில் இருந்தே ஏராளமான தொண்டர்கள் வந்து குவிந்தனர். அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த விழா நடந்தது. நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், பா.வளர்மதி, பழனியப்பன், தங்கமணி, செந்தில்பாலாஜி, மாதவரம் மூர்த்தி, ரமணா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
லட்டு கொடுத்து…
பல்வேறு அணிகள் சார்பிலும் தலைமைக் கழக வளாகத்தில் விழா கொண்டாடப்பட்டது. இனிப்புகளும் வழங்கப்பட்டன. நகரின் அனைத்து பகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
கோவில்களில் அன்னதானம்
ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அன்னதானமும் கொடுக்கப்பட்டது. நகரில் ஆங்காங்கே கொடி, தோரணம், வாழ்த்து பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒலிபெருக்கிகளில் பாடல்கள் ஒலிக்க அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து, விழா போல கொண்டாடினர்.
கோவில்களில் சிறப்பு பூஜை
முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை யொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். பாடி சிவன் கோவிலில் அம்பத்தூர் நகரக் கழகம் சார்பில் சிறப்பு பூஜையும் 6666 பேர்களுக்கு அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது. சென்னையில் உள்ள அனைத்து கோவிலிலும் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
விளையாட்டுப் போட்டிகள்
முதியோர், ஆதரவற்றோருக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. மாணவ- மாணவிகளுக்கு சீருடைகள், நோட்டு புத்தகங்கள், புத்தக பைகள், காலணிகள் போன்றவை வழங்கப்பட்டன. பல்வேறு போட்டிகளும் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. ரத்ததானமும் நடந்தது.
நள்ளிரவு 12 மணிக்கு
அமைச்சர் வி. செந்தில்பாலாஜி நேற்று இரவு சரியாக 12 மணிக்கு ஈஸ்வரன் கோவில் முன்பு அமைக்கபட்டு இருந்த விழா மேடையில் மெழுவர்த்தி ஏற்றி 66 கிலோ கேக் வெட்டினார். அப்போது கூடியிருந்த அ.தி.மு.க. வினர் மற்றும் பொதுமக்கள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க, நாளைய பாரத பிரதமர் ஜெயலலிதா வாழ்க என விண்ணை முட்டும் அளவில் கோஷமிட்டனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி
அதன் பின்னர் கண்ணை கவரும் விதத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பின்னர் அமைச்சர் வி.செந்தில் பாலஜி 66 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.
10 நாட்களுக்கு கொண்டாட்டம்
முதல் - அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, இன்று முதல் மார்ச் 5-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். கலை நிகழ்ச்சிகளும் நடை பெறுகின்றன.
நாடுமுழுவதும்
இது போல் புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா, கேரளா, அந்தமான், டெல்லி ஆகிய இடங்களிலும் பிறந்த நாளை அ.தி.மு.க. தொண்டர்கள் கொண்டாடினார்கள். வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டது.
கேக் வெட்டிய சோனா
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அதிமுகவினர் மட்டுமல்லாது நடிகை சோனாவும் கேக் வெட்டி கொண்டாடினார். அரசியலுக்கு நமீதா வரப்போவதாக தகவல்கள் வெளியாகும் வரும் நிலையில் ஜெயலலிதா பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி அதிமுக ஆதரவாளர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.