பிரச்சார வேனை விட்டு கீழே இறங்கி... ‘நாடாளுமன்றத்தில்’ ஏறி பேசும் ஜெயலலிதா
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் லோக்சபா தேர்தல் பிரசாரம் புதிய பொலிவுடன் களை கட்டியுள்ளது.மேலும், கடந்த தேர்தல்களின்போது அவர் கடைப்பிடித்த ஒரு உத்தியை தற்போது கைவிட்டுள்ளதையும் காண முடிகிறது.
சமீபத்திய தேர்தல்களின்போது, அதாகப்பட்டது கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரம் உள்பட, அனைத்திலும் அவர் வேனில் அமர்ந்தபடி எழுதி வைத்த அட்டையில் இடம் பெற்றிருந்த வாசகங்களைப் படித்தார்.
இந்த முறை அதை சற்றே மாற்றியுள்ளார். அதாவது வேனை விட்டு இறங்கி வி்ட்டார். மேடையில் ஏறிப் பேசி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
எழுதி... படித்து... பிரச்சாரம்!
பிற தலைவர்களைப் போல ஜெயலலிதா பிரசாரம் செய்வதில்லை பொதுவாக. எழுதி வைத்துப் படிப்பதையே தனது பாணியாகக் கொண்டுள்ளார்.
சின்னச் சின்ன மாற்றங்கள்...
ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான் பிரசாரம் செய்கிறார் ஜெயலலிதா. அவரது ஒரு பிரசாரப் பேச்சைக் கேட்டால் போதும். கடைசிப் பிரசாரம் வரை அவரது பேச்சு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். சின்னச் சின்ன மாற்றங்களைத் தவிர.
கலைஞர் வழி....
வழக்கமாக தேர்தல் பிரசாரங்களின்போது பிற தலைவர்கள் மேடை ஏறிப் பேசுவதைப் பார்க்கலாம். திமுக தலைவர் கருணாநிதி பெரும்பாலம் மேடை ஏறிப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
சில சமயங்களில் மட்டும்....
ஆனால் ஜெயலலிதா கடந்த சில தேர்தல்களாக வேனுக்குள் அமர்ந்தபடிதான் பேசி வருகிறார். எப்போதாவது அரிதாகத்தான் அவரை மேடையில் ஏறிப் பேசுவதைப் பார்க்க முடியும்.
பெரிய... பெரிய அட்டை
கடந்த சில தேர்தல்களாக அவர் வேனில் அமர்ந்தபடிதான் பேசி வந்தார். பெரியபெரிய அட்டையில் எழுதி வைத்து அதை வாசிப்பார். பின் சீட்டில் அமர்ந்திருக்கும் சசிகலா அல்லது வேறு யாராவது ஒரு பெண் ஜெயலலிதா வாசித்து முடித்த அட்டையை வாங்கி திரும்ப அதே ஆர்டரில் வைத்துக் கொள்வார்.
திரும்பவும் அதே...
அடுத்த ஊர் போனதும் மறுபடியும் அதே அட்டையை எடுத்து ஜெயலலதா வாசிபப்பார். மறுபடியும் ஆர்டர் போடுவார் பின் சீட் பெண்மணி.
டெல்லிக்குப் போக ஒத்திகையா...
ஆனால் இந்த லோக்சபா தேர்தலில் ஜெயலலிதா கீழே இறங்கி விட்டார். அதாவது மேடையேறிப் பேசி வருகிறார். அதே பிரசார வேனில்தான் அவர் பயணிக்கிறார். இருப்பினும் பிரசாரம் செய்யும் ஊரில் போடப்பட்டிருக்கும் பிரமாண்ட மேடையில் ஏறிப் பேசுகிறார். இருப்பினும் வழக்கம் போல எழுதி வைத்தேப் பேசி வருகிறார்.
நாடளுமன்ற மேடை....
ஒவ்வொரு ஊரிலும் மறக்காமல் பிரமாண்டமான நாடாளுமன்ற வடிவிலான மேடையைப் போட்டிருக்கிறார்கள். அந்த மேடையில் நின்றபடிதான் ஜெயலலிதா பேசுகிறார்.
உறுதிமொழி...
ஒவ்வொரு கூட்டத்திலும், கூட்டத்தினரைப் பார்த்து செய்வீர்களா என்று மக்களிடம் உறுதி மொழி வாங்காமல் விட மாட்டார் ஜெயலலிதா. இந்த முறையும் அவர் அதே போல பேச்சுக்கு இடை இடையே செய்வீர்களா என்று தவறாமல் கேட்டு வருகிறார் ஜெயலலிதா.