சட்டப்பேரவையில் ஜெ. படம் திறப்பு... எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு!
சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தனபால் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் 11வதாக ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றுள்ளது. திமுக சட்டசபை உறுப்பினர்களின் இருக்கைக்கு எதிர்புறம் இருக்கும் சுவற்றில் ஜெயலலிதாவின் படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
7 அடி உயரம் 5 அடி அகலத்தில் ஜெயலலிதாவின் முழு உருவமாக படம் வரையப்பட்டுள்ளது. பச்சை நிற சேலையில் இருகைகளையும் கோர்த்து நிற்கும்படி படம் வரையப்பட்டுள்ளது. ஜெயலலிதா படத்திற்கு கீழே அமைதி, வளர்ச்சி, வளம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. ஜெயலலிதா படத்திறப்புக்குப் பின்னர் அவர் சட்டசபையில் பேசிய உரை ஒலிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் படத்தை கவின்கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் மதியழகன் வரைந்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் புகழுரை
ஜெயலலிதா இறப்பு செய்தி கேட்டு துடுப்பு இல்லாத படகு போல தத்தளித்தோம். சட்டசபையில் தனி ஒருவராக வந்து சிங்கமென் கர்ஜித்தவர் ஜெயலலிதா. தமிழக சட்டசபையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து செயல்பட்டார். ஜெயலலிதா ஆட்சி தொடர்ந்து நல்லாட்சியாக செயல்படுத்தப்படும் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்சபையில் உரையாற்றினார்.
ஜெ. புகழ் பாடிய பழனிசாமி
பூமி உள்ளவரை ஜெயலலிதாவின் புகழ் இருக்கும், உலகத்தையே உற்று நோக்க வைத்தவர் ஜெயலலிதா என்று முதல்வர் பழனிசாமி புகழுரைத்தார். ஜெயலலிதாவின் புகழ் வரலாறு உள்ளவரை சட்டசபையில் நிலைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக புறக்கணிப்பு
படத்திறப்பு விழா நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏக்கள்,அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சட்டசபையில் ஜெயலலிதா புகைப்படம் திறப்புக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்ததால் அதன் எம்எல்ஏக்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதே போன்று திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சியும் இதில் பங்கேற்கவில்லை, விஜயதாரணி ஜெயலலிதா படத்திறப்புக்கு வரவேற்பு தெரிவித்திருந்த போதும் அவர் இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
தினகரன் பங்கேற்கவில்லை
திமுக உறுப்பினர்கள் அமரும் இடத்தில் அதிமுக எம்பிகள் அமர்ந்துள்ளனர். ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சியில் ஆர்கே நகர் எம்எல்ஏ தினகரனும் பங்கேற்கவில்லை, ஜெயலலிதா படத்திறப்பு தினகரன் வரவேற்பு தெரிவித்த நிலையிலும் இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. முன்னதாக அதிமுகவினர் தலைமைச் செயலக 4ம் எண் நுழைவு வாயிலில் எம்பி, எம்எல்ஏக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.