சசிகலா, பிரதாப் ரெட்டிக்கு சம்மன்... விரிவடையும் ஜெ. மரண விசாரணை வளையம்!
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் கேட்டு சசிகலா, பிரதாப் ரெட்டி, ப்ரீத்தா ரெட்டி உள்ளிட்டோருக்கு நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அளித்துள்ளது.
சென்னை : ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கமளிக்குமாறு சசிகலா மற்றும் அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி உள்ளிட்டோருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் 5ம் தேதி வரை அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்று அரசு நியமித்த ஒரு நபர் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. மருத்துவர் சரவணன், டாக்டர் பாலாஜி, ஜெ. தீபா, மாதவன், தீபக் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் சசிகலாவிற்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் சிகிச்சை காலம் முழுவதும் அவருடனே இருந்தார் என்ற அடிப்படையில் சசிகலாவிடம் விளக்கம் கேட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்குமாறு அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
15 நாட்களுக்குள் 3 பேரும் பதில் அளிக்குமாறு ஆறுமுகசாமி கமிஷன் சம்மனில் குறிப்பிட்டுள்ளது. டிசம்பர் 26ம் தேதியுடன் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கான காலக்கெடு முடியும் நிலையில், 15 நாட்கள் அவகாசம் கொடுத்து ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அளித்துள்ளதால் விசாரணை ஆணையத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டதற்கான அறிவிப்பு இன்றோ நாளையோ வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.