ஜெ.விடம் வீழ்ந்த இன்னொரு வீரப்பன்... 30 ஆண்டுகாலம்.... 3 மாநிலங்களுக்கு தண்ணி காட்டிய சந்தன வீரப்பன்
சென்னை: அரசியலில் தம்மை கடுமையாக எதிர்த்த ஆர்.எம். வீரப்பனை வெற்றிகரமாக எதிர்கொண்டவர் முதல்வர் ஜெயலலிதா. அதேபோல முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 30 ஆண்டுகாலம் காட்டுராஜாவாக வலம் வந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையை முடிவுக்கு கொண்டுவந்தவரும் முதல்வர் ஜெயலலிதாதான்.
[Read This: சிம்ம சொப்பனமாக இருந்த "வீரப்பன்களை" வீழ்த்திய ஜெயலலிதா!]
சந்தனக் கடத்தல் வீரப்பன்... தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் சுமார் 6,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 3 மாநிலங்களுடனும் 30 ஆண்டுகாலம் கண்ணாமூச்சு காட்டிக் கொண்டிருந்தவர்.
போலீஸ் அதிகாரிகள் உட்பட 150 பேர் படுகொலை, 2,000 யானைகளைக் கொன்று தந்த வேட்டை.. பல்லாயிரம் டன் சந்தன மரங்கள் கடத்தல்... இவைதான் வீரப்பன் மீதான குற்றச்சாட்டுகள்...

தனிராஜாங்கம்
அவரைப் பிடிக்க அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக தேடுதல் வேட்டை நடத்தி வந்தன. சத்தியமங்கலம் வனப்பகுதியில் தனி ராஜாங்கத்தையே நடத்தி வந்தார் வீரப்பன்.

தமிழ்த் தேசியம்..
ஒருகட்டத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பன் தமிழ்த் தேசியவாதியாகவும் விஸ்வரூபமெடுத்தார். அவருடன் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட தனித் தமிழ்நாடு கோரும் தமிழ்நாடு விடுதலைப் படையினரும் இணைந்து கொண்டனர்.

ராஜ்குமார் கடத்தல்
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை பிணைக் கைதியாக பிடித்துக் கொண்டு தமிழ்த் தேசியம் சார்ந்த நிபந்தனைகளையெல்லாம் விதித்து பரபரப்பை ஏற்படுத்தினார் வீரப்பன். 100 நாட்களுக்கும் மேலாக ராஜ்குமாரை பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்தார்.

கை கோர்த்த அதிரடிப்படைகள்
வீரப்பனைப் பிடிக்க வகுக்கப்பட்ட ஒவ்வொரு வியூகங்களும் தோல்வியில் முடிவடைந்தன. வீர்ப்பன் தலைக்கு விலை வைத்து அறிவித்தும் வேட்டையில் சிக்கவில்லை. காவிரி பிரச்சனையில் எதிரும் புதிருமாக இருந்தாலும் வீரப்பன் விவகாரத்தில் தமிழக- கர்நாடக அதிரடிப்படைகள் கை கோர்த்தன.

அதிரடிப்படை அமைத்த ஜெ.
ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா வால்டர் தேவாரம் தலைமையில் 1993-ம் வீரப்பனைப் பிடிக்க சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கினார். அப்போது ஜெயலலிதாவின் சிறப்பு பாதுகாப்பு படைக்கு தலைவராக இருந்த விஜயகுமாரை தமக்கு உதவியாக கோரினார் விஜயகுமார். இந்த அதிரடிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையிலும் வீரப்பனின் சந்தன வேட்டை தொடரவே செய்தது.

விஜயகுமார்
அதிரடிப்படையின் கண்ணில் மண்ணைத் தூவிதான் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தினார்; தமிழ்த் தேசிய படையினர் கை கோர்த்த சம்பவமும் நடந்தேறியது. 2001-ம் ஆண்டு மீண்டும் முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா, எல்லை பாதுகாப்பு படையில் இருந்த விஜயகுமாரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக்கினார்.

அதிரடிப்படை தலைவராக...
2003-ம் ஆண்டு வெங்கடேச பண்ணையாரை என்கவுண்ட்டரில் விஜயகுமார் போட்டுத் தள்ளிய நேரம்... சர்ச்சைகள் வெடித்து கொண்டிருக்கின்ற அதிரடிப்படையின் தலைவராக விஜயகுமாரை அனுப்பி வைத்தார் ஜெயலலிதா. உளவுத்துறை முழுமையாக அதிரடிப்படைக்கு தகவல்களை கொடுத்து வந்தது.

வீழ்ந்த வீரப்பன்
2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி வீரப்பனையும் கூட்டாளிகளையும் சுட்டுக் கொன்றது விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படை. வீரப்பனை பிடிக்க அதிரடிப்படை மேற்கொண்ட நடவடிக்கையின் பெயர் ஆபரேஷன் "கக்கூன்"...

பரிசுகள் அறிவிப்பு
வீரப்பன் கும்பலை வீழ்த்திய தமிழக அதிரடிப் படையினர் 752 பேருக்கு வீட்டு மனை,ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பதவி உயர்வு வழங்கி பெருமைப்படுத்தினார் ஜெயலலிதா. சென்னையில் அவர்களுக்கு பிரம்மாண்ட பாராட்டுவிழாவையும் நடத்தினார்.
30 ஆண்டுகாலம் 3 மாநிலங்களை அதிர வைத்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகாப்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து சரித்திர பெருமையைப் பெற்றார் ஜெயலலிதா!












Click it and Unblock the Notifications