சர்ச்சைகளுடன் வாழ்ந்து மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்
காஞ்சிபுரம் சங்கரமட சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக்குறைவினார் காலமானார். சங்கர மட தலைவராக இருந்த அவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
Recommended Video
சென்னை: காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் உடல் நலக்குறைவினால் மரணமடைந்தார். பாலியல் புகார், நடிகைகளுடன் பிரச்சினை, கொலை வழக்கு என பல சர்ச்சைகளில் சிக்கியவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மூத்த மடாதிபதியாக இருந்த போது ஜெயேந்திரர் தனது 19வது வயதில், 1954 ஆம் ஆண்டு காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்றார்.
40 ஆண்டுகள் கடந்து 1994ஆம் ஆண்டில் காஞ்சி சங்கர மடத்தின் 69வது பீடாதிபதியாக அவர் பொறுப்பேற்றார். மடம்னா தப்பு நடக்காதா என்று ஒரு படத்தில் கேட்பார் கமல். தனது பதவி காலத்தில் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார் ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள்.
ஜெயேந்திரர் வெளியேறினார்
1986 ஆம் ஆண்டு ஜெயேந்திரர் தனது துறவறத்துக்கு அடையாளமாக இருந்த தண்டத்தை போட்டு விட்டு மாயமானார். ஓரு மாதம் கழித்து தலைக் காவிரியில் இருந்த ஜெயேந்திரரை சிபிஐ தேடிக் கண்டுபிடித்து காஞ்சிக்கு அழைத்து வந்தனர். அப்போதுதான் விஜயேந்திரரை இளைய மடாதிபதியாக சங்கரமடம் நியமித்தது.
பாலியல் புகார் கூறிய எழுத்தாளர்
பல ஆண்டுகளுக்கு முன் அனுராதா ரமணனிடம் ஜெயேந்திரர் ஆபாசமாகவும், அத்துமீறியும் நடந்து கொண்டதாக
பகிரங்கமாக குற்றம் சாட்டினார். தனக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும் பேட்டி கொடுத்தார் அனுராதா ரமணன். வார இதழ் ஒன்றில் தொடராகவும் எழுதினார். கடந்த சில ஆண்டுகளுக்கு காவல்நிலையத்திலும் புகார் அளித்தார்.
ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கு
கடந்த 2002 ம் ஆண்டில், சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வீட்டில் புகுந்த மர்மக் கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில், ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, வேலைக்காரர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இந்த வழக்கில் சிக்கிய ஜெயேந்திரர் உள்பட 9 பேரை விடுதலையாகினர்.
கொலை வழக்கில் இருந்து விடுதலை
ஜெயேந்திரரின் பல்வேறு முறைகேடுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார் சங்கரராமன். 2004-ம் ஆண்டு வரதராஜ பெருமாள் கோயில் அலுவலகத்திலேயே சங்கரராமன் படு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 2004ஆம் ஆண்டு தீபாவாளி நாளில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து விஜயேந்திரர் உட்பட 25 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்த வழக்கில் இருந்து ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட அனைவரும் விடுதலையாகினர்.
ஹைகோர்ட்டில் வழக்கு
சங்கராச்சாரியார்கள் இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் தனது மனுவில் இந்த வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் மீது சந்தேகம் இருப்பதாகவும், மேலும் வழக்கில் ஆள்மாறாட்டம், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேர் பிறள் சாட்சியாக மாறினர் போன்றவை நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சைகளுடன் மறைந்த சங்கராச்சாரியார்
1994 முதல் பீடாதிபதி பொறுப்பில் இருந்த சங்கராச்சாரியர் ஜெயேந்திரர், 2004ஆம் ஆண்டு கொலை வழக்கில் சிக்கிய பின்னர் சிறை, நீதிமன்றம் என பத்தாண்டுகளுக்கும் மேலாக அலைய நேர்ந்தது. பல சினிமா நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டார் ஜெயேந்திரர். சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற பின்னரும் அவரைப் பற்றிய சர்ச்சைகள் வெளிவந்த வண்ணமே இருந்தன. தனது வாழ்நாளில் சர்ச்சைகளுடனேயே வாழ்ந்து மறைந்துள்ளார் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்.