தோல்வியை கூட கண்ணியத்துடன் ஏற்காத பண்பற்றவர் எச். ராஜா: கி. வீரமணி தாக்கு
சாரணர் இயக்க தோல்வியை கண்ணியத்துடன் ஏற்றுக் கொள்ளாத பண்பற்றவர் எச். ராஜா என சாடியுள்ளார் கி. வீரமணி.
சென்னை: சாரணர் இயக்க தேர்தல் தோல்வியைக் கூட கண்ணியத்துடன் ஏற்காத பண்பற்றவர் பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா என சாடியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
இது தொடர்பாக கி. வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் பல லட்சக்கணக்கில் உள்ள பள்ளி மாணவர்களிடையே, தொண்டு மனப்பான்மையை வளர்க்கவே தோற்றுவிக்கப்பட்ட நிறுவனத்தை, இவ்வாண்டு காவி கிரகணம் மறைத்து கைப்பற்றி மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் ஹிந்துத்துவ மதவெறியைப் புகுத்திட, பாஜகவின் தேசிய செயலாளர் என்ற பொறுப்பில் உள்ள எப்போதும் மற்ற தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து, ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் என்பதால், சட்டத்தின் - நீதியின் பிடியிலிருந்து தப்பித்துக் கொண்டுவரும் ஹெச்.ராஜா, கல்வித் துறையினர் மட்டுமே பொறுப்பு வகித்த தமிழ்நாடு சாரணியர் இயக்கத் தலைமையைக் கைப்பற்றிட தேர்தலில் நின்று, தமிழ்நாட்டின் கல்வி அமைச்சக இயந்திரத்தையும் பெருமளவில் பயன்படுத்தினார். மதவாதத்திற்கு எதிரான எதிர்க்கட்சித் தலைவர்கள், மு.க.ஸ்டாலின் உள்பட இதற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்த்து, அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கோரினர். நாமும் கோரினோம்.
எச். ராஜா தோல்வி
நேற்று நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள், தமிழ்நாடு சாரணர் இயக்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட எச்.ராஜா வெறும் 52 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார். 2 வாக்குகள் செல்லாதவையாகும்
பண்பற்றவர்
ஏற்கெனவே அப்பதவிக்குப் போட்டியிட்ட ஓய்வு பெற்ற பள்ளிக் கல்வி இயக்குநர் டாக்டர் மணி 232 வாக்குகளைப் பெருவாரியாகப் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்! தனது தோல்வியைக்கூட கண்ணியத்துடன் ஏற்றுக் கொள்ளாத பண்பற்ற ஓர் மனிதர் இவர்.
மாபெரும் பாடம்
தேர்தல் சரியாக நடைபெறவில்லை என்று பழிபோட்டு தேர்தல் முடிவு வந்த பிறகு கூறுவதிலிருந்தே இவர்எப்படிப்பட்டவர் என்பதை நாடும், மக்களும் அறிந்துகொள்வர். தமிழ்நாட்டில் காவிக் கடையை விரிக்க முயன்றவர்களுக்கு போணியாகாத முதல் தோல்வி - முற்றாகத் தொடருமே தவிர, அவர்களின் பதவி ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதற்கு இது ஒரு மாபெரும் பாடம் - சுவரெழுத்து!
வாழ்த்துகள்
பெரியார் உள்பட பலரையும் தாறுமாறாக விமர்சித்த ஒருவருக்குத் தக்க பாடத்தை - தமிழ்நாடு அரசு இயந்திரத்தையும் தாண்டி பாடம் கற்பித்த வாக்காளர்களுக்கு நமது பாராட்டு. வெற்றி பெற்ற டாக்டர் மணிக்கு நமது மகிழ்ச்சி கலந்த வாழ்த்துகள். காவிகளின் தோல்விகள் தொடரட்டும்''