காடுவெட்டி குருவும் நிலையை மாற்றினார் - பாஜகவுடனான கூட்டணிக்கு 'ஓகே'
மோசடி வழக்கில் திருச்சி சிறையில் உள்ள தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவரான பி.டி. அரசகுமாரை இன்று காடுவெட்டி குரு சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் காடுவெட்டி குரு கூறியதாவது:
கடந்த 3 மாதங்களாக திருச்சி மத்திய சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள பி.டி. அரசகுமார் உடல்நிலை மிக மோசமாக உள்ளது. இங்கு போதுமான மருத்துவ வசதிகள் இல்லை. தமிழக அரசு அவரை விடுதலை செய்ய மறுத்து வருகிறது.
நீதிமன்றம் மூலம் அவர் வெளியே வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகிற லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
தற்போது உள்ள சூழ்நிலையில் பா.ம.க. வருகிற தேர்தலில் தனித்தே போட்டியிடும். பா.ஜனதா தமிழ் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் 3ம் கட்ட பேச்சுவர்த்தை தொடங்குவதாக சொல்லியிருக்கிறார்... ஆனால் பேச்சுவார்த்தைக்கு உண்டான அறிகுறி தெரியவில்லை.
பா.ம.க.வுக்கு அதற்கான முறையான அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரியவி்ல்லை. பாரதிய ஜனதாவுடன் பேச்சுவார்த்தை நடந்து கூட்டணி ஏற்பட்டால் அதுகுறித்து பின்னர் அறிவிக்கப்படும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது.
இவ்வாறு காடுவெட்டி கூறினார்.
பாமகவின் பொதுக்குழுவில் பேசிய காடுவெட்டி குரு, தேசிய கட்சி, திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு பாஜகவுடன் கூட்டணி அமைப்பதா? என்று கேள்வி எழுப்பி அக்கூட்டணிக்கு முட்டுக்கட்டை போட்டிருந்தார்.
ஆனால் அன்புமணியோ பாஜகவுடன் கூட்டணி அமைத்தாக வேண்டும் என்று வலியுறுத்தியதோடு அதற்கான மும்முர பேச்சுவார்த்தைகளையும் நடத்தினார். இது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் காடுவெட்டி குருவும் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி அமைந்தால் அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.