நான் உங்க வீட்டு விளக்கு.. என்னைப் பாதுகாப்பது உங்க பொறுப்பு.. ராமநாதபுரத்தை கலக்கிய கமல் பேச்சு!
நான் சினிமா நட்சத்திரமல்ல உங்கள் வீட்டு விளக்காக நினைத்து என்னை ஏற்றி வையுங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ராமநாதபுரம் : நான் சினிமா நட்சத்திரமல்ல உங்கள் வீட்டு விளக்காக நினைத்து என்னை ஏற்றி வையுங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். என்னை பாதுகாக்க வேண்டியது உங்களது பொறுப்பு என்றும் கமல் தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன், ராமநாதபுரம் அரண்மனை வாயில் முன்பு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசினார்.
கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி கமலின் பேச்சை கேட்டனர். மேடையேறி பேசிய நடிகர் கமல் கூறியதாவது: 45 வருடம் கழித்து ராமநாதபுரம் வருகிறேன். ஊர் மாறினாலும் மக்கள் மாறவில்லை அப்படியே இருக்கின்றனர்.
என்னுடைய மனநிலையை மதுரையில் தான் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் அன்பை பார்த்து இங்கேயே சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. இதுவரை என்னை சினிமா நட்சத்திரமாகவே பார்த்திருப்பீர்கள், இனி நான் விளக்கு. என்னை ஏற்றி வைத்து பொத்தி பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.
உங்களுடன் இங்கு வரும் போது நெரிசலை பார்க்கும் போது பதட்டமாக இருந்தது, யாருக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது என்று. மேடையில் இருந்து பார்க்கும் போது இந்த அன்புக்காகத் தான் நான் வந்தேன் என்பது தெரிகிறது, என்னை ஏற்றி விடவேண்டியது உங்களுடைய பொறுப்பு என்று கமல் சுருக்கமாக தனது பேச்சை முடித்துவிட்டு சென்றார்.