அஞ்சலகத்திற்கு ஒருநாள் “விசிட்” அடித்த காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளி மாணவர்கள்!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் 65 மாணவர்கள் நேற்று காரைக்குடி தலைமை தபால் நிலையத்திற்கு களப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
தலைமை தபால் அலுவலக தலைமை அலுவலர் தங்கவேலு மாணவர்களை இன்முகத்துடன் வரவேற்றார். கடிதம் எழுதுதல்,படிவங்கள் பூர்த்தி செய்தல்,கடிதங்களை பிரிக்கும் முறைகள்,பதிவு தபால்கள் அனுப்புதல் போன்ற அஞ்சல் அலுவலகத்தின் அன்றாட செயல்பாடுகளை அலுவலர்கள் மாணவர்களுக்கு விளக்கி கூறினர்.
அஞ்சலக சேமிப்புகள்,அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் குறித்து அலுவலர்கள் மாணவர்களுக்கு விரிவாக கூறினர்.
அஞ்சல் துறையில் வழங்கப்படும் மின் கட்டணம் செலுத்துதல், தொலைபேசி கட்டணம் செலுத்துதல் போன்ற சேவைகள் மற்றும் அஞ்சலகத்தின் மூலம் செய்யப்படும் விற்பனைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.
அஞ்சலகத்தில் உள்ள தானியங்கி பணம் வழங்கும் (ATM) எந்திரத்தையும் மாணவர்கள் பார்வையிட்டனர். இக்களப் பயணத்திற்கான ஏற்பாடுகளை சித்ரா மற்றும் ஜாக்குலின் கனிமொழி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இக் களப்பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் அஞ்சலக செயல்பாடுகளை முழுமையாக தெரிந்து கொண்டதாகவும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இக்கல்வியாண்டில் இதுபோன்று பல்வேறு பயனுள்ள களப்பயணங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என தலைமையாசிரியர் பீட்டர்ராஜா தெரிவித்தார்.