காவிரி: தமிழகம்-கர்நாடகா இடையே போக்குவரத்து துண்டிப்பு- எல்லைகளில் வாகனங்கள் நிறுத்தம் #cauvery
ஓசூர்/உதகை: காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இரு மாநில எல்லைகளில் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு காவிரி நீரை திறந்துவிட என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. ஆனால் இந்த உத்தரவை ஏற்க மறுத்து கர்நாடக விவசாயிகள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் தமிழக அரசு பேருந்துகள் நேற்று கொளத்தூர் அருகே உள்ள பாலாறு சோதனைச்சாவடியுடன் நிறுத்தப்பட்டன. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலை மற்றும் மைசூரு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள்.
தமிழக பேருந்துகள் நிறுத்தம்
ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, பழனி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து பெங்களூரு, மைசூரு, கொள்ளேகால், சாம்ராஜ் நகர், குண்டல்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் 50-க்கும் மேற்பட்ட தமிழக அரசு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படவில்லை.
கர்நாடகா பேருந்துகளும்....
கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு இயக்கப்படும் 40-க்கும் மேற்பட்ட கர்நாடக அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை. வழக்கமாக தமிழக அரசு பேருந்துகள் சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம், ஆசனூர் வழியாக கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் பகுதியில் 12 கிலோ மீட்டர் சென்று மீண்டும் தமிழ்நாட்டில் உள்ள தாளவாடியை சென்றடையும். ஆனால் நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் சென்று அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தலமலை வழியாக தாளவாடியை சென்றடைந்தன.
தவிப்பு
கர்நாடக மாநிலத்தில் இருந்து நேற்று ஏராளமான பொதுமக்கள் ஈரோடு, கோவை, சத்தியமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு வந்திருந்தனர். அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் அவர்கள் கர்நாடகம் செல்ல முடியாமல் தவித்தனர்.
ஓசூர் வரைதான்..
கோவையில் இருந்து கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பெங்களூரு, மைசூரு, மாண்டியா, கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளுக்கு 60 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளும் இயக்கப்படவில்லை. சேலம் வழியாக பெங்களூரு, மைசூருக்கு செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்துகள் ஓசூர் வரை மட்டும் இயக்கப்பட்டது.
உதகையில் அவதி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து பெங்களூரு, மைசூரு, மாண்டியா உள்பட பல்வேறு இடங்களுக்கு செல்லும் தமிழக வாகனங்கள் எதையும் போலீசார் அனுமதிக்கவில்லை. அந்த வாகனங்கள் எல்லையில் திருப்பி அனுப்பப்பட்டன. கர்நாடகாவில் இருந்தும் தமிழகத்துக்குள் எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகளும் தங்களது சொந்த பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பெரும் அவதிக்குள்ளாகினர்.