கார்த்திக்குக்கு இருந்த ஒரே ஆதாரமும் புட்டுக்கிச்சு... கருணாநிதியுடனான சந்திப்பு ரத்து!
சென்னை: அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் இன்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து திமுக கூட்டணியில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் திடீரென அதை திமுக ரத்து செய்து விட்டது.
திமுக கூட்டணியில் இதுவரை கட்சிகள் என்று பார்த்தால் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவைதான் உள்ளன. அதுதவிர ஏகப்பட்ட சாதி, மத அமைப்புகள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன. தினசரி பல்வேறு அமைப்புகள் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் நடிகர் கார்த்திக் கட்சி திமுக கூட்டணியில் இணைவதாக செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக இன்று திமுக தலைவர் கருணாநிதியை, கார்த்திக் சந்தித்துப் பேசவுள்ளதாகவும், அப்போது கார்த்திக் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என்றும், அதில் கார்த்திக் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் கூறின.
மேலும், அம்பாசமுத்திரம், ஆலங்குளம் அல்லது தென்காசி ஆகியவற்றில் ஒரு தொகுதியில் கார்த்திக் போட்டியிடக் கூடும் என்றும் செய்திகள் வெளியாகின.
ஆனால் திடீரென இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டு விட்டது. மு.க.ஸ்டாலின்தான் இதை ரத்து செய்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இன்று காலை கார்த்திக் வருவதாக இருந்தது. இதனால் கார்த்திக் கட்சியினர் அறிவாலயத்தில் திரண்டனர். செய்தியாளர்களும் திரண்டனர். ஆனால் கார்த்திக் வரவில்லை. நீண்ட நேரமாகியும் அவர் வராத நிலைியல் பிற்பகலில் சந்திப்பு ரத்தாகி விட்டதாக செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் கார்த்திக் கட்சியினர் பெரும் ஏமாற்றமடைந்தனர். அனைவரும் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். சந்திப்புக்கு முன்பே தொகுதி குறித்த தகவலை கார்த்திக் கட்சியினர் கசிய விட்டதால் திமுக அதிருப்தி அடைந்ததாகவும், அதனால்தான் சந்திப்பை ரத்து செய்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.