கரும்பு எப்படி சாப்பிடனும்னு தெரியுமா....?
பொங்கல் வந்தால் தேங்காய்ச் சில், நெய் கமழும் சூடான சர்க்கரைப் பொங்கல், கரும்பு ஆகியவைதான் அன்றைக்கு ஹீரோக்கள், ஹீரோயின்கள் மற்றும் வில்லன்கள் எல்லாமே.. வில்லன் எப்படி என்று சந்தேகம் வரலாம்.. பிறகு, கரும்பை பார்த்துப் பதமாக சாப்பிடாவிட்டால் பல்லில் குத்தி, நாக்கில் குத்தி ரசாபாசமாகி விடுமே. .அப்ப கரும்பும் ஒரு வகையில் வில்லன்தானே.. இருந்தாலும் கரும்பை சாப்பிடும் விதத்தில் சாப்பிட்டால் அதை விட டேஸ்ட்டான ஒரு இனிப்பு எதுவுமே கிடையாது என்று கண்ணை மூடிக் கொண்டு லயித்துப் போய் விடுவோம்.
பொங்கல் பண்டிகையே ஒரு அருமையான தத்துவார்த்தமான விழா. தமிழர் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநில கிராமப்புறங்களிலும் இந்த பொங்கல் பண்டிகையானது விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
இதில் கரும்பு நீக்கமற நிறைந்த ஒரு பண்டமாக மாறியுள்ளது. அதிலும் இந்த கரும்பை வைத்து நமது முன்னோர்கள் சொல்லிச் சென்ற தத்துவம் சிலாகிக்க வைக்கும். கரும்பு போலத்தான் நமது வாழ்க்கையும். எப்படி கரும்பில் இனிமையும், சுவையின்மையும் இருக்குமோ அதேபோலத்தான் நமது வாழ்க்கையிலும் இன்பமாகிய இனிமையும், துன்பமான சுவையின்மையும் சேர்ந்தே இருக்கும்.
நாம் எப்படி கரும்பின் சுவையின்மைப் பகுதியை விட்டு விட்டு சுவையைத் தேடி போகிறோமோ அதேபோலத்தான் வாழ்க்கையிலும் சோகத்தை தூக்கித் தூரப் போட்டு விட்டு சந்தோஷத்தை மட்டுமே நாடியிருக்க வேண்டும் என்பது கரும்பை வைத்து நமது முன்னோர் வகுத்த விதியாகும்.
நுனிக் கரும்பு எப்போதுமே இனிக்காது. அதில் சுவையும் இருக்காது. அதேசமயம், அடிக் கரும்புதான் ருசிக்கும், தித்திப்பாக இருக்கும். சுவைக்க சுவைக்க இனிமையும் தரும். இந்த இடத்தில் நம்மவர்கள் உழைப்பின் அருமையயும் உணர்த்துகிறார்கள்.
கரும்பின் மேல் பகுதியிலிருந்து மெல்ல மெல்ல அடிக் கரும்புக்கு வரும்போதுதான் இனிமை கூடும். அதேபோலத்தான் வாழ்க்கையிலும் கஷ்டப்பட்டால்தான், உழைத்தால்தான் அதன் பலன் என்ற இனிமையை அனுபவிக்க முடியும் என்பது இந்த உழைப்பு தத்துவம்.
கரும்பில் இன்னொரு வாழ்க்கைத் தத்துவமும் அடங்கியிருக்கிறது. கரும்பு பார்க்க முரட்டுத்தனமாக, கரடுமுரடாக, கடினமானதாக, அடுக்கடுக்காக வளைவுகளுடன் கூடியதாக இருந்தாலும் கூட அதன் தோலை நீக்கிப் பார்த்தால், ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டி வரும்போது எப்படி இனிமை புதைந்திருக்கிறதோ, குவிந்திருக்கிறதோ, அதேபோலத்தான் வாழ்க்கையும்... எத்தனை கடுமையானதாக இருந்தாலும் கூட கடுமையான உழைப்பால், அணுகுமுறையால் வாழ்வின் இனிமையை நாம் நுகர முடியும் என்பது முன்னோர் வாக்கு.
இப்படி ஒரு கரும்பை வைத்து பல தத்துவங்களை நமது மூதாதையர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். சுவைக்கும் உணவுப் பொருளாக இருந்தாலும் கூட அதிலும் ஒரு தத்துவத்தை வைத்து உணவோடு சேர்த்து உணர்வுகளையும் ஊட்டுவது தமிழர் பண்பாடாகும். அத்தகைய சிறப்பு படைத்த பொங்கல் திருநாளிலும் நாம் தித்திப்புடன் கரும்புண்டு, பொங்கல் உண்டு, புத்தாடை புணைந்து, புது வாழ்வைத் தொடங்கலாம்..!
சரி, கரும்பை எப்படிச் சாப்பிடனும்னு கடைசி வரை சொல்லவே இல்லையே... அது ரொம்ப சிம்பிள்தான். கரும்பை எடுத்து, பல்லால், தோலை மெதுவாக கடித்து இழுத்து கீழே துப்பி விட்டு, பிறகு கடித்துச் சாப்பிட வேண்டும்.. நன்று மென்று சுவை அனைத்தையும் ருசித்த பின்னர் சக்கையை கீழே போட்டு விட வேண்டும்.... அவ்வளவுதான்!
(கரும்பு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதுன்னு சொல்வாங்க.. அதையும் தவறாமல் கடைப்பிடிச்சுருங்க...!)