கருணாநிதியை பொறுத்தவரை நாகரிகமாக பழகக் கூடியவர் யார் தெரியுமா?
கருணாநிதியை பொறுத்தவரை நாகரிகமாக பழகக் கூடியவர் என்றால் அது யார் தெரியுமா? அது எம்ஜிஆர்தானாம்.
சென்னை: தமிழகத்தை ஆட்சி செய்த முதல்வர்கள் குறித்து கருணாநிதி தெரிவித்த ஒரு வரி கருத்தில் நாகரிகமாக பழகக் கூடியவர் எம்ஜிஆர் என்று பதிலளித்துள்ளார்.
கருணாநிதியின் 94-ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை விழா நடைபெறவுள்ளது.
கருணாநிதியிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்யமான பதில்கள் இப்போது உங்களுக்காக..
சட்டமன்றத்தில் இவர்கள் எப்படி?
காமராஜர் மிகவும் எளிமையானவர். பக்தவச்சலம் நிர்வாகத்தில் திறமையானவர், அண்ணா எதிர்க்கட்சியினரையும் தன் உரையினால் ஈர்ப்பவர். எம்.ஜி.ஆர். நாகரிகமாகப் பழகக் கூடியவர். பிடிவாத குணம் கொண்டவர் ஜெயலலிதா ஆவார்.
சிறந்த பேச்சாளர்கள் யார்?
பேராசிரியர் அன்பழகன், கே.டி.கே.தங்கமணி , குமரி அனந்தன், அப்துல் லத்தீப், பாப்பா உமாநாத் ஆகியோர் கருணாநிதிக்கு பிடித்த சட்டமன்ற பேச்சாளர்கள் ஆவர். திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்ததிலேயே அவருக்கு பிடித்த சட்டம் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை-குடியிருப்புமனைச் சட்டம்-நில உச்ச வரம்புச் சட்டம்-அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் ஆணை உள்ளிட்டவைகளாம்.
மறக்க முடியாத சட்டமன்றக் கலவரம்
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா அணியினரும், ஜானகி அணியினரும் பேரவைக்குள் மோதிக்கொண்டு காவல் துறையினரும் உள்ளே புகுந்து மன்ற உறுப்பினர்கள் ஒலிபெருக்கியைப் பறித்துக் கொண்டு சண்டையிட்ட காட்சி கருணாநிதிக்கு மறக்க முடியாத ஒன்றாகும்.
எதிராளியைத் திணற வைத்த சம்பவம்
சட்டமன்றத்தில் ஒரு முறை டாக்டர்.எச்.வி.ஹண்டே திமுக அரசைப் பற்றி விமர்சிக்கும் போது, "இது மூன்றாம் தர சர்க்கார்" என்றார். உடனே ஆளுங்கட்சியினர் வெகுண்டெழுந்தனர். நான் அனைவரையும் கையமர்த்திவிட்டு, "டாக்டர் ஹண்டே இந்த அரசை மூன்றாந்தர அரசு என்றார். திருத்திக்கொள்ளவேண்டும். இது நாலாந்தர அரசு, பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று கூறப்படும் வர்ணங்களில் நான்காவதாகக் கூறப்படும் சூத்திரர்களின் அரசு!" என்று கருணாநிதி குறிப்பிட்டார்.
பொன்னான நாள்
மண்டல் கமிஷன் பரிந்துரையையொட்டி, மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தீர்மானத்தை கருணாநிதி முன்மொழிந்து பேரவையில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது. இந்த நாளைப் பொன்னான நாள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.