கருணாநிதி 10 நாட்களில் கட்சிப் பணிக்கு திரும்புவார்... கனிமொழி நம்பிக்கை
திமுக தலைவர் கருணாநிதி இன்னும் 10 நாட்களில் கட்சிப் பணிக்கு திரும்புவார் என்று கனிமொழி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
சென்னை: உடல் நலம் குன்றியுள்ள திமுக தலைவர் கருணாநிதி இன்னும் 10 நாட்களில் கட்சிப் பணிகளில் ஈடுபடுவார் என்று அவரது மகளும், ராஜ்ய சபா உறுப்பினருமான கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 25ம் தேதி, திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகார பூர்வமாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. வழக்கமாக கருணாநிதி உட்கொள்ளும் மருந்து ஒன்று ஒத்துக் கொள்ளாமல் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஓய்வு எடுத்து வரும் கருணாநிதியை நேரில் வந்து சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கு டாக்டர்கள் தினமும் வீட்டிற்கு சென்று மருத்துவம் பார்த்து வருகின்றனர். தொலைபேசி வாயிலாகவே அரசியல் கட்சித் தலைவர்கள் கருணாநிதியின் மகனும், கட்சியின் பொருளாளருமான மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கோபாலபுரம் சென்று தந்தை கருணாநிதியை பார்த்துவிட்டு திரும்பிய கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கருணாநிதிக்கு உடல் நலம் குணமடைந்து வருவதாகவும், இன்னும் 10 நாட்களில் கட்சிப் பணிகளில் அவர் ஈடுபடுவார் என்றும் கனிமொழி கூறியுள்ளார்.
மேலும், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொலைபேசி வாயிலாக கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்ததாகவும் கனி மொழி கூறினார்.
காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் அனைத்து கட்சியினரும் ஓராணியில் திரள்வது போல் தமிழ்நாட்டில் நடப்பதில்லை என்றும், காவிரி பிரச்சனை குறித்து ராஜ்ய சபாவில் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுப்பார்கள் என்றும் கனி மொழி தெரிவித்துள்ளார்.