கரூர் சேவல் சண்டையில் விபரீதம்: விஷக்கத்தி பாய்ந்து இருவர் மரணம்
கரூர்: கரூரில் காலில் கத்தியை கட்டி விளையாட விட்ட சேவல் சண்டை போட்டியில் கழுத்தில் கத்தி பாய்ந்து இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் சேவல் சண்டை போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கோவிலூர் மற்றும் பூலான்வலசு பகுதிகளில் சேவல் சண்டை போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் உள்ளூர்காரர்கள் மட்டுமின்றி, ஈரோடு, கோவை, மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு தங்களது வளர்ப்பு சேவல்களை பந்தயம் கட்டி மோத விடுவார்கள். வெற்றி பெறும் சேவலின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த போட்டியில் சிலர் சேவலின் காலில் கத்தியைக் கட்டி போட்டிகள் நடத்தியதால், போட்டியில் பங்கேற்ற சேவல்களில் தோற்றுப்போகும் சேவல்கள் இறந்தன. சில சேவல்களின் கால்களில் விஷம் தடவிய கத்திகளையும் ஒரு சிலர் பயன்படுத்தினர். இதனால், இப்போட்டிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், கத்தியை பயன்படுத்தாமல் சேவல் சண்டை நடத்த பொதுமக்கள் அனுமதி கோரியதையடுத்து தற்போது கடந்த 13 ஆம் தேதி முதல் மீண்டும் அரவக்குறிச்சி பகுதிகளில் சேவல் சண்டை போட்டிகள் பொங்கல் பண்டிகை தினத்திலிருந்து தொடர்ந்து 4 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாள் போட்டி எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடந்தது. இரண்டாம் நாள் புதன்கிழமையன்று நடைபெற்ற போட்டியின்போது, கிராமக் குழுவினரின் அனுமதியின்றி கோவிலூர் குளத்துக்கரையில் சிலர் சேவல்களின் காலில் கத்தி வைத்து மோதவிட்டுள்ளனர்.
அப்போது அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி சசிகுமார் (37), ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பாலாஜி (30) ஆகிய இருவர் மீது சேவலின் காலில் இருந்த கத்தி குத்தி கிழித்ததில் இருவரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து கரூர் மாவட்டத்தில் சேவல்கட்டு போட்டி நடத்த தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் கூறியது: உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சேவல் சண்டை நடத்தாமல், சேவல்களின் காலில் கத்தியைக் கட்டி போட்டி நடத்தியுள்ளனர்.
இதனால் கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டை போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி யாரேனும் சேவல் சண்டை நடத்தினால் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர்.