தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கொளத்தூர் மணி கைது!
சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள மத்திய அரசு அலுவலகமான வருமானவரித்துறை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நால்வரையும் பெட்ரோல் குண்டு வீசத்தூண்டியதாக திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி கடந்த 2ஆம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சேலம் மாநகர காவல் ஆணையர் மாகாளியின் உத்தரவின் பேரில், சேலம் சிறையில் உள்ள திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கடந்த 2009 ஆண்டு கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் குற்றமற்றவர் என்று நிரூபித்ததை அடுத்து கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.