ஜெ. உத்தரவால் சிறப்பு சிகிச்சை பெற்ற புதுகை ஆசிரியர் ரவிச்சந்திரன் உயிரிழந்தார்... கதறும் மாணவர்கள்
புதுக்கோட்டை: கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவால் சிறப்பு சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டை கொத்தமங்கலம் ஆசிரியர் ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்து விட்டார். இந்த தகவலை அறிந்த மாணவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் காண்பவர்களின் கண்களை குளமாக்கியது. சாட்டை படத்தில் தயாளன் ஆசிரியரைப் போல தங்களின் உயர்வுக்காகவே மரணம் வரை வாழ்ந்த ஆசிரியரை நினைத்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் மாணவர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அடுத்த மேற்பனைக்காடு கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 50. மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். விவசாய குடும்பத்தில் பிறந்த ரவிச்சந்திரன் பட்டப்படிப்பு படித்து விலங்கியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2012 முதல் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த ரவிச்சந்திரன், அந்தப் பள்ளிக்கு வேலைக்கு சென்றது முதல் ஆண்டுதோறும் பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வில் விலங்கியல் பாடத்தில் அனைத்து மாணவர்களும் 100 சதவீதம் மதிப்பெண்ணும் தேர்ச்சியும் அடைந்துள்ளனர்.
மருத்துவர்களாக்கியவர்...
கொத்தமங்கலம் அரசு பள்ளியில் 7 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். கடந்த வாரம் ஆசிரியர் ரவிச்சந்திரனுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
சிறுநீரகம் சிக்கல்...
சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகும் காய்ச்சல் குறையவில்லை. பல ஆய்வுகள் எடுக்கப்பட்ட போது அவரது கல்லீரல் கடும் பாதிப்பிற்குள்ளாகி சிறுநீரகம் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.
ஜெ.விடம் கோரிக்கை
தனியார் மருத்தவமனையில் 90 லட்சம் ரூபாய் பணம் செலவு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது, தங்கள் பள்ளி ஆசிரியர் ரவிச்சந்திரன் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருவதை அறிந்த கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 400 பேரும் தனித் தனியாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, ஆசிரியர் ரவிச்சந்திரன் சிகிச்சைக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினர்.
சிறப்பு சிகிச்சை
இதனையடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த தகவல் செய்திகளாக வெளிவந்த நிலையில் முதல்வர் உத்தரவு படி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆசிரியர் ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் சிகிச்சைக்காக சிறப்பு மருத்தவர்கள் குழு அமைக்கப்பட்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறினார்.
காலமானார்....
ஆசிரியர் விரைவில் குணமடைய வேண்டும் சிறப்பு வழிபாடுகளையும் மாணவர்கள் நடத்தினார்கள். தொடர்ந்து சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று திடீரென சிகிச்சை பலனின்றி ஆசிரியர் ரவிச்சந்திரன் நேற்று உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்ததும் மாணவர்கள் வகுப்பறைகளில் கதறி அழுதனர். இந்த சம்பவம் ஆசிரியர்களையும் கண் கலங்க செய்தது.
ஒரு ஆசிரியருக்காக மாணவர்களும், சக ஆசிரியர்கள், பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் காண்பவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
கடைசிபேச்சு....
ஆசிரியரின் மரணம் மாணவர்களை மட்டுமல்லாது பள்ளி தலைமை ஆசிரியரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆசிரியர் ரவிச்சந்திரன் மரணத்திற்கு முன்பாக தலைமை ஆசிரியர் மேகநாதனிடம் பேசினாராம். எனக்காக மாணவர்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியதால் முதலமைச்சர் தனிக்கவணம் செலுத்தி அமைச்சரை நேரில் அனுப்பி சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்துள்ளார்கள். உடல் நலமடைந்து வருவதாக அறிகிறேன். இன்னும் ஒரு வாரத்தில் ஊருக்கு வந்து உடனே பள்ளிக்கு வந்துவிடுவேன் என்று கூறியுள்ளார் ரவிச்சந்திரன்.
மருத்துவர்களாக்குவேன் என சபதம்
ஒரு வாரத்தில் வந்து அவர்களுக்கு பாடம் நடத்துவேன் என்றும் சனி, ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் எடுத்து விரைவில் பாடங்களை முடித்து அனைத்து மாணவர்களையும் நல்ல முறையில் மதிப்பெண் பெற வைப்பேன் என்றும் கூறியுள்ளார் ரவிச்சந்திரன். இந்த ஆண்டும் சிலரை மருத்துவ மாணவர்களாக அனுப்புவேன் என்று சொல்லுங்கள் என்று பேசியுள்ளார் ரவிச்சந்திரன். அதை மாணவர்களிடம் கூறியுள்ளார் தலைமை ஆசிரியர் மேகநாதன்.
தயாளன் ஆசிரியரேதான்...
ஆசிரியர் ரவிச்சந்திரன் வந்து விடுவார் என்று மாணவர்கள் நம்பியிருந்த நிலையில் நேற்று அவர் மரணமடைந்து விட்டார். இது மாணவர்களை மட்டுமல்லாது ஆசிரியர்கள் பெற்றோர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. சாட்டை படத்தில் வரும் தயாளன் ஆசிரியர் போல மாணவர்களுக்கு உயிரை கொடுத்து பாடம் நடத்திய ஆசிரியர் நோய் தாக்கி உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.