கூடங்குளம் 3,4-வது அணு உலைகள் 2023-ம் ஆண்டு செயல்பட தொடங்கும்: வளாக இயக்குனர் தகவல்
கூடங்குளம் 3 மற்றும் 4வது அணு உலைகள் வரும் 2023-ம் ஆண்டு செயல்பட தொடங்கும் என வளாக இயக்குனர் சுந்தர் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி: கூடங்குளத்தில் 3-வது மற்றும் 4-வது அணு உலைகளுக்கு காங்கிரீட் போடும் பணி நடக்கிறது. இந்த பணி அடுத்த ஆண்டு முடிவடையும். அதன் பின்னர் வரும் 2023 ஆம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கும் கூடங்குளம் அணுமின்நிலைய திட்ட வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திர நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கூடங்குளம் கூடங்குளம் அணுமின்நிலைய திட்ட வளாக இயக்குனர் சுந்தர் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மொத்தம் 6 அணுஉலைகள் அமைக்கப்பட உள்ளன. இதில் முதல் மற்றும் இரண்டாவது அணுஉலைகள் அமைக்கப்பட்டு செயல்பட தொடங்கி விட்டது.
முதல் அணுஉலையில் இருந்து 810 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 58 முதல் 59 சதவீதம் வரை தமிழ்நாட்டுக்கும், புதுச்சேரிக்கு 7 சதவீதமும், மீதி உள்ள மின்சாரம் கேரளா மற்றும் கர்நாடகத்துக்கு வழங்கப்படுகிறது. 3-வது மற்றும் 4-வது அணு உலைகளுக்கு காங்கிரீட் போடும் பணி நடக்கிறது.
இந்த பணி அடுத்த ஆண்டு முடிவடையும். இங்கு 2023-ம் ஆண்டில் இருந்து மின்உற்பத்தி தொடங்கும். 5-வது மற்றும் 6-வது அணு உலை அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து பணிகள் தொடங்கப்படும்.
கூடங்குளம் அணுமின்நிலையம் பற்றி மக்களிடம் உள்ள அச்சத்தை போக்க விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தை தினமும் 200 பொதுமக்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.