சமையல் சிலிண்டர் தராமல் இழுத்தடித்த ஏஜென்சி- போலீஸ் மூலம் பெற்ற 'அதிரடி' பெண்!
சென்னை: சென்னையில் சமையல் கேஸ் சிலிண்டர் பதிவு செய்தும் வராததால் போலீஸ் மூலமாக கேஸ் சிலிண்டர் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பெண் ஒருவர்.
தமிழ் நாட்டில் பீட்சாவைக் கூட 45 நிமிடங்களில் பெற்று விடலாம். ஆனால், சமையல் கேஸ் சிலிண்டர் சாத்தியமே இல்லை.
இந்நிலையில் சென்னையில் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இழுத்தடிக்கப்படும் விநியோகம்:
பதிவு செய்தவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் சிலிண்டர் விநி யோகம் செய்யாமல் விநியோகஸ்தர்கள் இழுத்தடிக்கிறார்கள்.
புகார் மேல் புகார்:
சமையல் கேஸ்க்கு பதிவு செய்து 20 நாட்களுக்கு மேலாகியும் கிடைக்க வில்லை என்று புகார் எழுந்துள்ளது.
செயற்கையாக தட்டுப்பாடு:
செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு சமையல் கேஸ் விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
போலீஸில் புகார்:
இந்நிலையில் சென்னையில் ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண் சமையல் கேஸ் முறையாக வினியோகம் செய்யாததால் போலீஸ் நிலையத்திற்கே சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.
ஒரு மாதமா நோ கேஸ்:
சசிகலா என்ற பெண் சமையல் கேஸ் சிலிண்டருக்கு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி பதிவு செய்தார். அவர் பதிவு செய்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் சிலிண்டர் வழங்கப்பட வில்லை.
கண்டுகொள்ளாத ஏஜென்சி:
பலமுறை கேஸ் ஏஜென்சிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ள வில்லை.
கடுப்பான சசிகலா:
ஒரு கட்டத்தில் கேஸ் தீர்ந்து விட்டது. இதனால் ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிடும் நிலை ஏற்பட்டது. நிலைமை மோசமானதால் அபிராமிபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சசிகலா புகார் கொடுத்தார்.
ஒருவழியா விநியோகம்:
அதன்பின்னர் போலீசார் இதில் தலையிட்டு செப்டம்பர் 4 ஆம் தேதி அன்று சிலிண்டர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து அந்த ஏஜென்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அந்த அதிரடிப் பெண்.
8 நாட்களில் சிலிண்டர்:
இதுகுறித்து ஐ.ஓ.சி. தரப்பில் கூறும்போது, "பதிவு செய்த 8 நாட்களுக்குள் கேஸ் விநியோகம் செய்ய வேண்டும். சிலிண்டர் தட்டுப்பாடு எதுவும் இல்லை. சீரான வினியோகம் உள்ளது.
நடவடிக்கை நிச்சயம்:
அப்படி இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட நாளில் வினியோகம் செய்யாத ஏஜென்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தனர்.
விழித்துக் கொண்ட மக்கள்:
இதனால் தெரிய வருவது என்னவென்றால் மக்கள் எல்லாம் விழித்து விட்டார்கள். எப்படி ஏமாத்தலாம் என்பவர்களுக்கெல்லாம் ஆப்பு ரெடியா பின்னால் வரும் என்பதுதான்.