நித்தியானந்தா பெயரைச் சொல்லி வரிந்து கட்டி சண்டையில் குதித்த ரஞ்சிதா.. பல்லாவரத்தில் பரபரப்பு!
சென்னை: நித்தியானந்தா பெயரில் சென்னை பல்லாவரத்தில் ரூ30 கோடி மதிப்புள்ள நிலத்தை அவரது பிரதம சிஷ்யையான நடிகை ரஞ்சிதா உள்ளிட்டோர் ஆக்கிரமித்து குடிசை போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரத்தில் அரசு புறம்போக்கு கிராம நத்தத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் இன்றைய மதிப்பு ரூ30 கோடி.
40 ஆண்டுகால குடியிருப்பு
இந்த இடத்தில் பல்லாவரம் கிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் கட்டி 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென ராமநாதன் என்பவர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் வசிக்கும் இடத்துக்கு உரிமை கோரி நீதிமன்றம் சென்றார்.
கோர்ட்டில் தள்ளுபடி
ஆனால் நீதிமன்றத்தில் உரிய ஆவணங்கள் இல்லாததால் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே திடீரென நடிகை ரஞ்சிதா தலைமையில் நித்தியானந்தா சீடர்கள் கோஷ்டி ஒன்று நேற்று பல்லாவரத்துக்கு வந்தது.
மிரட்டிய ரஞ்சிதா
அங்கு கிருஷ்ணனை அழைத்து இது ராமநாதனின் மகளுக்கு சொந்தமான இடம். அவர் எங்கள் மடத்துக்கு எழுதிவிட்டார்... இங்கிருந்து ஓடிப் போய்விடுங்கள் என மிரட்டியுள்ளனர். இதனால் கிருஷ்ணனும் அவரது குடும்பத்தினரும் அதிர்ந்து போயுள்ளனர்.
டேரா போட்ட கோஷ்டி
இருப்பினும் விடாத ரஞ்சிதா கோஷ்டியினர், அதே குடியிருப்பு வளாகத்தில் ஒரு சிறிய குடிசை அமைத்து நித்தியானந்தா படத்துக்கு பூஜைகள் நடத்தி டேரா போட்டுள்ளனர். தமிழகத்தின் பல இடங்களில் நித்யானந்தா கோஷ்டி இதேபோல் அடாவடியில் ஈடுபட்டு அடிவாங்கி செல்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது.