சென்னைக்கு படையெடுக்கிறார்களா கதிராமங்கலம் மக்கள்?.. கோட்டையில் போலீஸ் குவிப்பு! #Kathiramangalam
கதிராமங்கலம் கிராம மக்கள் சென்னை வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
சென்னை: கதிராமங்கலம் கிராம மக்கள் சென்னையில் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து தலைமைச் செயலகம் முன்பு ஏராளமான போலீசார் இன்றும் குவிக்கப்பட்டுள்ளனர்.
கதிராமங்கலத்தில் 12 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுத்து வருகிறது. இந்நிலையில் அங்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுத்து செல்லப்படும் குழாய்களை மாற்றி வருகிறது.
இதனால் ககதிராமங்கலம், கொடியாலம் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கதிராமங்கலத்தில் தடியடி
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை எண்ணெய் கசிவு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடியடி நடத்தி கலைத்த காவல்துறையினர் பலரை கைது செய்தனர்.
முக்கிய இடங்கள் முற்றுகை?
இதனால் அங்கு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கதிராமங்கலம் கிராம மக்கள் சென்னைக்கு வரவுள்ளதாகவும் அவர்கள், தலைமைச்செயலகம், கவர்னர் மாளிகை, பாஜக அலுவலகம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களை முற்றுகையிடப் போவதாகவும் தகவல் பரவியது.
இன்றும் போலீசார் குவிப்பு
இதையடுத்து நேற்று அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோட்டையில் பரபரப்பு
தலைமைச் செயலகத்தில் வழக்கத்தை விட போலீசார் அதிகளவில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் கோட்டை வட்டாரத்தில் இன்றும் பரபரப்பு நிலவி வருகிறது.
மெரினாவிலும் போலீஸ் குவிப்பு
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை போல் கதிராமங்கலத்துக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தகவல் வெளியானது. இதனால் நேற்று அங்கும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.