நாகர்கோவிலில் மணல் லோடுக்கு லஞ்சம் கேக்குறாங்க... லாரி உரிமையாளர்கள் சங்கம் புகார்!
நாகர்கோவில் அஞ்சுகிராமம் சோதனை சாவடியில் மணல் மற்றும் கற்கள் கொண்டு செல்லும் லாரி உரிமையாளர்களிடம் லஞ்சம் கேட்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
நாகர்கோவில்: அஞ்சுகிராமம் சோதனை சாவடியில் லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
நாகர்கோவிலுள்ள அஞ்சுகிராமம் சோதனை சாவடியில் போலீசார் மாமூல் கேட்டு மிரட்டுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளாரிடம் லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவில் மண்டல பாறாங்கற்கள் மற்றும் மணல் ஏற்றும் டாரஸ் லாரி, மினி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். அதில் 'நாங்கள் கருங்குளத்தில் உள்ள அரசு அனுமதித்த கல்குவாரியில் இருந்து, மினி லாரிகளில் கற்களை கொண்டு வந்து கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளில் விநியோகம் செய்து வருகிறோம்.
அப்போது, அஞ்சுகிராமம் சோதனை சாவடியை கடந்து தான் கன்னியாகுமரிக்குள் வர வேண்டும். அரசிடம் முறையாக அனுமதி பெற்று, பாஸ் வாங்கி தான் லோடு கொண்டு வருகிறோம். இருப்பினும் அஞ்சுகிராமம் சோதனை சாவடியில் இருப்பவர்கள் ஒரு லோடுக்கு ரூ.50 வீதம் கண்டிப்பாக வேண்டும் என கேட்டு மிரட்டுகிறார்கள். அவ்வாறு கொடுக்க மறுக்கும் ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்வதாக கூறுகிறார்கள். எனவே தாங்கள் உரிய முறையில் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்' என மனுவில் தெரிவித்துள்ளனர்.