லாரி ஸ்டிரைக்.. ஒரு லாரியும் ஓடவில்லை.. தமிழக-கேரளா எல்லை வெறிச்!
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் - கேரளா வழியாக சரக்கு லாரிகள் இயக்கப்படவில்லை என்பதால் சாலைகள் வெறிச்சோடியுள்ளன.
செங்கோட்டை: இன்சூரன்ஸ் தொகையை உயர்த்தியது, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வாட் வரியை தமிழக அரசு உயர்த்தியது உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 30 ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தமிழகம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 6 தென் மாநிலங்களைச் சேர்ந்த 30 லட்சம் லாரிகள் இயக்கப்படுவது வியாழக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
லாரிகள் வேலை நிறுத்தம்
தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு நெல்லை மாவட்டம் செங்கோட்டை புளியரை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் சரக்குகளை ஏற்றி சென்ற வண்ணம் இருக்கும். தற்போது லாரி ஸ்டிரைக் தீவிரமடைந்து உள்ளதால் இந்த வழியே செல்லும் சரக்கு வாகனங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
வெறிச்சோடிய சாலைகள்
நேற்று இரவு முதல் கேரளாவில் லாரி ஸ்டிரைக் வலுப்பெற்றுள்ளதால் நேற்று நள்ளிரவு முதல் இந்த பாதையில் வாகனங்கள் போக்குவரத்து முற்றிலும் குறைந்து காலையில் வாகனங்களே இல்லாமல் இந்த சாலை வெரிச்சோடி காணப்பட்டது.
நெரிசல் இல்லாத சாலைகள்
கன ரக வாகனங்கள் போக்குவரத்து இல்லாமல் இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசல் எதுவும் இன்றி எளிதாக மகிழ்ச்சியுடன் பயணிக்கின்றனர். போக்குவரத்து நெரிசல் எதுமில்லை என்று இருசக்கர வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
சரக்குகள் தேக்கம்
இதேபோல கோவை வழியாக செல்லும் லாரிகளும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. சரக்கு போக்குவரத்து, காய்கறிகள், கோழிகள், முட்டைகள் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.