"சங்கர்-கெளசல்யா நிலைமை எங்களுக்கும் வரக்கூடாது”- திருவள்ளூர் போலீஸில் தஞ்சமடைந்த காதல் ஜோடி
சென்னை: திருப்பூரில் காதலித்து திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்காக சங்கர் கொலை செய்யப்பட்டதையடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி திருவள்ளூரில் மேலும் ஒரு காதல் ஜோடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் காதல் கலப்பு திருமணம் செய்த சங்கர் என்ற பொறியியல் மாணவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கெளசல்யா காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த கொலை சம்பவம் ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி வெளியானதில் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையை சேர்ந்த காதல் கலப்பு திருமண ஜோடியான சிவபெருமாள்-காமாட்சி ஆகியோர் திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மற்றொரு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
திருவள்ளூர் நேதாஜி சாலையை சேர்ந்த தாரகேசவன் என்பவரது மகள் நந்தினி. இவர் திருவள்ளூரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக வேலை செய்து வருகிறார்.
பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் என்பதால் கார்த்திக்குக்கும், நந்தினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. கடந்த 15 ஆம் தேதி நந்தினியை கார்த்திக் காரில் அழைத்துச் சென்றார். நந்தினியை கார்த்திக் கடத்திச் சென்றுவிட்டதாக அவரது தாயார் கீதா திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கையும் நந்தினியையும் தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று கார்த்திக்கும், நந்தினியும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சனிடம் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஒரு மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
இதுகுறித்து நந்தினி, "நாங்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தோம். நாங்கள் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் எங்களது காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எங்களை பிரிக்க நினைத்தார்கள். இருந்தாலும் காதலை கைவிட மறுத்த நாங்கள் கடந்த 15 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி, திருப்பதிக்கு சென்று திருமணம் செய்து கொண்டோம். எனது தாய், தந்தை, மாமா மற்றும் உறவினர்கள் மூலம் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications