இனிமே 'அந்த' மாதிரி கச்சேரி வச்சே ஆகனும்னு யாரும் சொல்லப்படாது..!
மதுரை: கோவில் திருவிழாக்களில் ஆபாச ஆட்டம், இரட்டை அர்த்தத்திலான பாடல்கள் இடம்பெறக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அது காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழக கிராமங்களில் கோவில் திருவிழாக்களில் ஆட்டம் பாட்டம் கச்சேரி இடம் பெறுவது சகஜம். அதிலும் சில ஊர்களில் ஆபாசப் பாடல்களுக்கு குத்தாட்டம் ஆடுவதும், அரை குறை உடையுடன் பெண் கலைஞர்கள் ஆடுவதும் ரொம்ப சகஜகமாக இருந்து வருகிறது. இதற்கு சமீப காலமாக காவல்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.
திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் நிகழும் கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா, கோயில் விழாக்களில் பல்வேறு நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
- ஆடல், பாடல் நிகழ்ச்சியை இரவு 7.30 மணிக்குத் தொடங்கி 10 மணிக்குள் முடிக்க வேண்டும்.
- எந்தவிதமான ஆபாச நடனமோ, ஆபாச வசனங்களோ இடம் பெறக் கூடாது.
- மது போதையுடன் வருவோரை அனுமதிக்கக் கூடாது.
- மாணவர்களின் மனதைக் கெடுக்கும் விதமான இரட்டை அர்த்தப் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது.
- குறிப்பிட்ட அரசியல் கட்சி, மதம், ஜாதி சார்ந்த பாடல்கள், நடனம் இடம்பெறக் கூடாது.
- கட்சி, மதத் தலைவர்களுக்கு ஆதரவாக பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது.
- மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் நிகழ்ச்சி இருக்கக் கூடாது.
- நிபந்தனைகள் மீறப்பட்டாலோ, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டாலோ போலீஸார் நடவடிக்கை எடுக்கலாம்.
- அனைத்து நிபந்தனைகளையும் குறிப்பிட்டு போலீஸார் எழுத்துப்பூர்வ அனுமதி வழங்க வேண்டும்.