மியான்மரில் ராஜபக்சேவை மன்மோகன்சிங் சந்திக்க கருணாநிதி எதிர்ப்பு

மியான்மர் நாட்டில் நாளை நடைபெற இருக்கும் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார். அப்போது அவர் அந்த மாநாட்டிற்கு வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார். இத்தகவலை டெல்லியில் வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதாசிங் உறுதி படுத்தியுள்ளார்.
கடந்தாண்டு இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பதற்கு தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து அம்மாநாட்டில் இந்தியா சார்பாக சல்மான் குர்ஷித் கலந்து கொண்டார். இந்நிலையில் ராஜபக்சேவுடனான பிரதமரின் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில், மன்மோகன்சிங் - ராஜபக்சே சந்திப்புக்கு திமுக தலைவர் கருணாநிதி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கேள்வி:- மியான்மரில், இலங்கை அதிபர் ராஜபக்சேயை, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சந்திக்கப் போவதாகச் செய்தி வந்துள்ளதே?.
பதில்:- இலங்கையில் நடந்தது போர்க் குற்றங்கள்தான் என்றும், அதுகுறித்து சுதந்திரமான நம்பகமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும், இதுபற்றி இந்தியாவே தனித்தீர்மானம் ஒன்றினை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவர வேண்டுமென்றும், தமிழ் உணர்வு கொண்ட தமிழர்களும், தமிழ் அமைப்புகளும் ஒவ்வொரு தமிழனும் கேட்டுக்கொண்டிருக்கிற நேரத்தில், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை அதிபரைச் சந்தித்துப் பேசுகிறார் என்பது தமிழர்களையும், தமிழ்நாட்டையும் புறக்கணிக்கின்ற செயலாகும். மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் ஏன்தான் இப்படியெல்லாம் செய்கிறார்களோ என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை' என இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications