ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார மதிமுக விவசாயி அணியினர் திருவோடு போராட்டம்
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவதற்கான நிதியை தூத்துக்குடி மாவட்ட மதிமுக சார்பில் மதிமுகவின் விவசாய அணியினர் தாங்களே விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பிச்சை எடுத்து திரட்டி தருவதாக மாவட்ட ஆட்சியாளர் ரவிகுமாரை முற்றுகையிட்டு திருவோட்டுடன் திடீர் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுமார் 100ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி பாழ்பட்டு மண்மேடாகிப்போன ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாரவேண்டும் என்று மதிமுக மற்றும் விவசாயிகள் சார்பில் அரசிற்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் பாழ்பட்டு பாசனத்திற்கு பயனில்லாமல் போன ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவதற்கான எந்த முயற்சியும் தமிழக அரசால் மேற்கொள்ளப்படவில்லை.
பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு:
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணையை வரும் 2015ம் ஆண்டின் பருவமழைக்காலத்திற்கு முன்பாக தூர் வார உத்தரவிடக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் ஆலோசனையின்பேரில் மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் தொடர்ந்த பொதுநல வழக்கில் அணையை தூர் வார தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
19 நாட்களுக்குப் பிறகு:
உத்தரவு கிடைத்த 19நாட்களுக்கு பிறகு ஸ்ரீவைகுண்டம் அணையில் கடந்த ஜூன் 30ம் தேதி முதல் தூர் வாரும் பணிகள் பெரளவிற்கு நடந்து வருகிறது. இது விவசயிகள் மற்றும் அணையின் தூர் வாரும் உத்தரவினை பெறுவதற்காக போராடிய மதிமுகவினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியாளர் தலைமையில் கூட்டம்
இத்தகையசூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (16.07.2015) மாவட்ட ஆட்சியாளர் ரவிகுமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற மதிமுகவின் மாவட்ட விவசாய அணி செயலாளரும், பேரூர் பகுதி நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான பேரூர் சிவஞானவேல் ''ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணிகள் எந்தளவிற்கு உள்ளது, இதற்கான அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா? பணிகள் மெதுவாக நடைபெறுவதற்கு என்ன காரணம்? என்று ஆட்சியாளரிடம் கேள்வி எழுப்பினார்.
ஆயத்தப் பணிகள் தொடக்கம்:
இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியாளர் ரவிகுமார், ஸ்ரீவைகுண்டம் அணையில் பொதுப்பணித்துறையின் பராமரிப்பு நிதி மூலமாக தூர் வாரும் ஆயத்தப்பணிகள் துவங்கி நடந்து வருகிறது. அணையை தூர் வாருவதற்கான திட்டமதிப்பீடு 5.93கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கவில்லை:
அணையை தூர் வாருவதற்கான நிதியை இன்னும் அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. பொதுப்பணித்துறையினர் அனுப்பி வைத்துள்ள திட்டஅறிக்கை மதிப்பீடு அடிப்படையில் இன்னும் சில தினங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றார்.
மதிமுகவினர் கேள்வி:
இதனைத்தொடர்ந்து மதிமுக விவசாய அணியினர் ஸ்ரீவைகுண்டம் அணையின் தூர் வாரும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும், பணிகளை விரைந்து முடித்து இந்த வருடமாவது 15டிஎம்சி தண்ணீர் வீணாகாத வகையில் சேமித்திடவேண்டும், இந்ததிட்டப்பணிகளை அரசு தாமதப்படுத்துவதின் நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பினர்.
தீர்ப்பாய உத்தரவால் அனுமதி:
இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியாளர் ரவிகுமார் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவதற்கு அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. விவசாயிகளும் தொடர்ந்து இந்த கூட்டத்தில் கேள்வி எழுப்பினர். இந்தநேரத்தில் தனிமனிதர் ஒருவர் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்த காரணத்தினால் அதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி:
இந்த அனுமதியை பெறுவதற்கு தமிழக அரசு பின்புலமாக இருந்து உதவி செய்துள்ளது என்பது முக்கியமானதாகும். தமிழக அரசும் அணையை தூர் வாரவேண்டும் என்றுதான் தீர்ப்பாயத்தில் தெரிவித்தது. இதன் பலனாக இதற்கான அனுமதி கிடைத்துள்ளது, இது தனிமனிதருக்கு கிடைத்த வெற்றி அல்ல, அனைத்து விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி தான் என்றார்.
ஏன் ஒதுக்கவில்லை:
இதனைத்தொடர்ந்து மதிமுக விவசாய அணியினர் ''ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவதற்கான நிதியை தமிழக அரசு ஏன் இன்னும் ஒதுக்கவில்லை? இதற்கான அரசாணை ஏன் வெளியிடப்படவில்லை? என்று கேள்வி எழுப்பினர்.
ஆட்சியர் பதில்:
இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியாளர் ரவிகுமார் ''ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்னும் சில தினங்களில் இதற்கான அரசாணை வெளியிடப்படும். வரும் 23ம் தேதி அணையை தூர் வாருவதற்கான டெண்டர் விடப்படுகிறது. அதன்பின்பு 24ம் தேதியில் இருந்து பணிகள் மிகவேகமாக நடைபெறும் என்று தெரிவித்தார்.
ஏன் பார்க்கவில்லை:
மதிமுக மகாராஜன் அணையின் தூர் வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியாளரான நீங்கள் ஏன் சென்று பார்க்கவில்லை? கடந்த 12ம் தேதி கொங்கராயகுறிச்சிக்கு சென்ற நீங்கள் அணையின் வழியாக சென்றபோது கூட தூர் வாரும் பணிகளை பார்வையிடாமல் சென்றது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
நான் பார்த்ததை நீங்கள் பார்க்கவில்லை:
இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியாளர் ரவிகுமார், நான் அணையின் தூர் வாரும் பணிகளை பார்வையிட்டதை நீங்கள் பார்க்கவில்லை, நான் சென்று பார்த்துள்ளேன் என்று பதில் அளித்தார். அதற்கு மதிமுக மகாராஜன், மாவட்ட ஆட்சியாளர் தூர் வாரும் பணியை பார்வையிட்டால் எங்களுக்கு மகிழ்ச்சி தான், ஆனால் அந்த செய்தியை ஏன் பத்திரிக்கைகளுக்கு தெரிவிக்கவில்லை என்று கேட்டார்.
செல்லும் இடமெல்லாம் கூட்டிச் செல்ல முடியுமா:
இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியாளர் ரவிகுமார், நான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பத்திரிக்கை நிருபர்களை அழைத்து சென்று புகைப்படம் எடுத்து வெளியிடவேண்டும் என்று இல்லை. இருந்தாலும் உங்களுக்காக வேண்டுமானால் நான் அடுத்தமுறை செல்லும்போது உங்களையும், பத்திரிக்கை நிருபர்களையும் அழைத்துசெல்கிறேன் என்று கூறினார்.
சரமாரி கேள்வி:
ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவதற்கான அனுமதி கிடைத்து 36நாட்களுக்கு மேலாகியும் அணையை தூர் வாருவதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்காமல் இருப்பது ஏன்? அப்படியானால் இந்த அரசு இந்த தூர் வாரும் பணியை தாமதப்படுத்தினால் மழை வந்துவிடும், அப்புறம் அணையின் தூர் வாரும் பணிகளை கிடப்பில் போட்டுவிடலாம் என்று நினைக்கிறதா? என்று மதிமுக விவசாய அணியினர் மாவட்ட ஆட்சியாளர் ரவிகுமாரிடம் சராமாரியாக கேள்வி எழுப்பினர்.
திருவோட்டுடன் போராட்டம்:
இதனைத்தொடர்ந்து மதிமுக விவசாய அணி செயலாளர் பேரூர் சிவஞானவேல் தலைமையில் மாவட்ட ஆட்சியாளர் ரவிகுமார் முன்பு தரையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். அத்துடன் மதிமுக விவசாய அணியினர் மற்றும் விவசாயிகள் திருவோடு ஏந்தி அங்கிருந்தவர்களிடம் ''ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வார நிதி தாருங்கள்'' என்று பிச்சை கேட்டு நிதி வசூலித்தனர். பிச்சை எடுத்தவர்களுக்கு கூட்டத்தில் இருந்தவர்கள் ஒரு ரூபாய், 2 ரூபாய், 10 ரூபாய் என நிதி அளித்தனர்.
கஷ்டமா என்ன:
மேலும், மாவட்ட ஆட்சியாளரிடம் மதிமுகவினர் ''ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவதற்கான அனுமதியை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் போராடி பெற்றுத்தந்த எங்களுக்கு அதற்கான நிதியை பெற்றுத்தருவதில் எந்தவித கஷ்டமும் இல்லை. தமிழக அரசிடம் அதற்கான நிதி இல்லையென்றால் நாங்கள் விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் பிச்சை எடுத்து அதற்கான நிதியை திரட்டி தருகிறோம் என்று திருவோட்டுடன் ஆட்சியாளர் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
3 நாள் பொறுக்க கோரிக்கை:
இந்தநேரத்தில் மாவட்ட ஆட்சியாளர் ரவிகுமார் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவதற்காக 143வருடங்கள் பொறுத்திருந்த நீங்கள் இன்னும் 3 தினங்கள் மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள். இதற்குள் அதற்கான அரசாணை வந்து விடும். அதன்பின்பு டெண்டர் விடப்பட்டு அணையின் தூர் வாரும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.
கைவிடப்பட்ட போராட்டம்:
மாவட்ட ஆட்சியாளர் ரவிகுமார் அளித்த உறுதியின் பேரில் மதிமுக விவசாய அணியினர் மற்றும் விவசாயிகள் தங்களின் பிச்சை எடுக்கும் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.