கொடநாடு கொலை வழக்கு என்ன க்ரைம் நாவலா? மத்திய அரசு உடனே விசாரணை நடத்த தீபா வேண்டுகோள் !
கொடநாடு கொலை வழக்கு க்ரைம் நாவல் போன்று சென்று கொண்டுள்ளதாக தீபா தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு தலையிட்டு விசாரணை நடத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முக்கிய ஆவணத்தடயங்கள் குற்றவாளிகளால் அழிக்கப்படுவதற்கு முன்பே மத்திய அரசு தலையிட்டு உரிய விசாரணையை நடத்த வேண்டும் என்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை நிறுவனர் தீபா கூறியுள்ளார்.
கொடநாடு காவலாளி கொலை வழக்கில் முக்கிய ஆவணத் தடயங்கள் குற்றவாளிகளால் அழிக்கப்படுவதற்கு முன்பே மத்திய அரசு தலையிட்டு உரிய விசாரணையை நடத்த வேண்டும் என்று தீபா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொடநாடு பங்களாவிற்குள் புகுந்த கொள்ளையர்கள் கைக்கடிகாரங்களையும், அழகுசாதன பொருட்களையும்தான் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் கொள்ளையர்கள் மாட்டிக் கொள்வோம் எனக்கருதி கேரளா தப்பித்து போகும் வழியில் ஒரு ஆற்றில் கொள்ளையடித்த கைக்கடிகாரங்களை வீசி விட்டு சென்றனர் என்று நீலகிரி மாவட்ட சூப்பிரண்டு முரளிரம்பா கூறி இருக்கிறார். இது கிரைம் நாவல் போன்று சென்று கொண்டுள்ளது.
ஆற்றில் வீசப்பட்ட வாட்சுகள் சயானின் காரில் சிக்கியது எப்படி? கேரளா போலீசுக்கு போனது எப்படி? இதற்கு தமிழக உயர் காவல்துறை அதிகாரிகள் பதில் கூறக் கடமைப்பட்டவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
காவல்துறை கைப்பற்றிய கடிகாரத்தில் அம்மாவின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது வாட்சுகள் கைப்பற்றப்பட்டதாக கூறுவதை மக்கள் நம்புவதாக இல்லை. வாகனத் திருட்டு வழக்கு ஒன்றில் பிஜித்ஜாய், ஜம்ஷீர் ஆகிய இருவரை கேரளா போலீஸ் கைது செய்த பின்தான் இவர்கள் கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தமிழக போலீசுக்கே தெரிய வந்துள்ளது.
இவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் அடிப்படையில் மனோஜ் சாமியார் என்பவர் கைது செய்யப்படுகிறார். அதன் பின் ஒன்பது பேரை இக்கொலை, கொள்ளை வழக்கில் கூலிப்படை என்று கைது செய்கிறார்கள். ஆனால் எஸ்டேட் மானேஜர் நடராஜன் இது சம்பந்தமாக விசாரிக்கப்படவும் இல்லை. கைது செய்யவும் இல்லை. அவரை காவல் துறையினர் மேம்போக்காக நடத்துவது ஏன்?
நான்குபேரை கைது செய்ய பிறகு அம்மாவின் அறையில் பீரோவை உடைத்து விலை உயர்ந்த 5 கைக்கடிகாரங்கள் ஒரு கிரிஸ்டால் சிலை ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றார்கள் என்ற முரண்பட்ட தகவலை காவல்துறை கூறி வருவதை ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. தன்படம் அச்சிட்ட இந்த கைக்கடிகாரங்களைதான் அம்மா அவர் பாதுகாப்பாக வைத்திருந்தார்களா? இதை கொள்ளை அடிப்பதற்குதான் காவலாளியை கொலை செய்தார்களா? இத்தனை மர்ம மரணங்கள் சாதாரண கைக்கடிகாரத்துக்குதானா? நம்ப கூடியதாக இல்லை.
இதில் மர்மங்கள் நிறைய உள்ளது. மர்ம முடிச்சுகளை அவிழ்க்கப்பட வேண்டியது காவல்துறையின் கடமையாகும். இதில் பல்வேறு மர்ம புதர்கள் மண்டிக்கிடக்கிறது. சீர்செய்ய வேண்டியது காவல்துறையின் கடமையாகும். உண்மை குற்றவாளிகளை தப்பித்து விடாமல் இருக்க, முக்கிய ஆவணத் தடயங்கள் குற்றவாளிகளால் அழிக்கப்படுவதற்கு முன்பே மத்திய அரசு தலையிட்டு உரிய விசாரணையை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.